டி.என்.பி.எஸ்.சி கேள்வித்தாளா இது?

தமிழக அரசில் 7,301 காலி பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி குரூப் 4க்கான தேர்வு ஜூலை 24 அன்று நடைபெற்றது. அந்த கேள்வித்தாள்களில் இடம்பெற்றுள்ள வினாக்கள், ஆளுங்கட்சி மற்றும் அவர்களின் கூட்டணி கட்சிகளுக்கு விளம்பரம் அளிக்கும் வகையில் கேட்கபட்டிருப்பதாக தேர்வர்களும் பொதுமக்களும் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இது குறித்து தேர்வு எழுதிய சிலர் கூறுகையில், தேர்வில் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. அதில், ஈ.வே.ராமசாமி மற்றும் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பற்றிய 5 கேள்விகள் கேட்கப்பட்டன. 117வது வினாவில் திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரீய சமீதி, அஸாம் கண பரிஷத் உள்ளிட்ட கட்சிகளின் சின்னங்கள் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. இதி;ல் உச்சபட்ச கொடுமையாக, ஆளும் தி.மு.க என்ற ஒரு அரசியல் கட்சி நடத்தும் அக்கட்சியின் பத்திரிகையான முரசொலி பற்றியும் 48வது வினாவில் கேட்கப்பட்டது. ஆளும் கட்சி மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை விளம்பரம் செய்யும் நோக்கில் இப்படி தரமற்ற வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது இது என்ன டி.என்.பி.எஸ்.சி கேள்வித்தாளா அல்லது முரசொலி பத்திரிகையா என்ற சந்தேகத்தை எழுப்புவதாக உள்ளது. இது போன்ற கேள்விகள் முன்னெப்போதும் கேட்கப்படவில்லை என்று சமூக ஊடகவாதிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.