கொள்ளையடிப்பது தான் குறிக்கோளா?

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “30,000 கோடி பணத்தை என்ன செய்வது, எங்கு வைப்பது என்று தடுமாறிக் கொண்டிருக்கின்றனர் என தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனே பேசிவிட்டு, அதனை புனையப்பட்டது என்று அவரே எப்படிச் சொல்ல முடியும்? எனவே இதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ரூ. 30,000 கோடி என்பது சாதாரண விஷயமல்ல. ரூ. 30,000 கோடி ஊழல் செய்யப்பட்டது என்று நிதியமைச்சரே வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத்தான் இதனை நாங்கள் பார்க்கிறோம். எல்லா வலைதளங்களிலுமே இது காட்டுத்தீப்போல பரவி வருகிறது. ஆனால், ஊடகங்கள்தான் இதனை வெளியிடவில்லை. எங்களுக்கு பெரிய சந்தேகமே தற்போது அவர் பேசியதுதான். சமூக வலைதளங்களில் இதுபோல நிறைய வருகிறது. ஆனால், நிதியமைச்சர் மறுப்பு அறிக்கைவிட்ட பிறகுதான், இதில் ஏதோ இருக்கிறது என்று தோன்றுகிறது. இது அவருடைய குரல்தான். இதையெல்லாம் வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும். ஆளுநரிடம் இதை சமர்ப்பிப்போம். இதுதொடர்பாக மத்திய அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவோம். உண்மையென்றால், நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏதேதோ விஷயங்களுக்கு எல்லாம் அறிக்கை வெளியிடும் முதல்வர், இதுதொடர்பாக அறிக்கை வெளியிடவேண்டியதுதானே? இது போலி என்று அறிக்கை வெளியிடவேண்டியதுதானே? அ.தி.மு.க மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாதபோது, எத்தனை குற்றச்சாட்டுகளை எங்கள் மீது அவர்கள் கூறினர். ஆதாரபூர்வமாக எதுவுமே கிடையாது. எனினும், எங்கள் முன்னாள் அமைச்சர்கள் மீது எப்படியெல்லாம் வழக்குகள் புனையப்படுகிறது. அதிமுகவை திட்டமிட்டு இந்த தி.மு.க அரசு பழிவாங்கிக் கொண்டிருக்கிறது. 2 ஆண்டுகளாக அவர்கள் மக்களுக்கு நன்மை எதையும் செய்யவில்லை. கொள்ளையடிப்பதைத்தான் குறிக்கோளாக கொண்டிருக்கின்றனர். 30 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்து உள்ளனர் என்றால், அதை நினைத்துப் பார்க்கவே அதிர்ச்சியளிக்கிறது” என்று கூறினார்.