மகளிர் கெளரவ சேமிப்பு சான்றிதழ் திட்டம் அறிமுகம்

மத்திய நிதி அமைச்சகம் அண்மையில் தொடங்கிய மகளிர் கெளரவ திட்டத்தின் சேமிப்பு சான்றிதழ்கள் அஞ்சலகங்களில் தற்போது கிடைக்கிறது. நாட்டில் மகளிர் சக்தியை அதிகரிக்கும் வகையில் இந்த புதிய சிறுசேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது 31.03.2025 வரை அமலில் இருக்கும். பெண்கள் தங்களுக்காகவோ அல்லது பெண்குழந்தைகளின் சார்பில் பாதுகாவலரோ இத்திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் 7.5 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கில் சேர்க்கப்படும்.  கணக்கை தொடங்க குறைந்தபட்சத்தொகை ரூ.1,000, அதிகபட்சத் தொகை ரூ. 2 லட்சம்.  ஒரே தவணையில் இந்த டெபாசிட் தொகையை கட்ட வேண்டும். கணக்கு தொடங்கியதில் இருந்து 2 ஆண்டு காலத்தில் அது முதிர்வடையும். கணக்கை 6 மாதத்திற்கு பின்னர் முன்கூட்டியே முடித்துக்கொள்ளவும் அனுமதி உண்டு. அருகில் உள்ள அஞ்சலகத்திற்கு சென்று இந்தக் கணக்கை தொடங்கலாம். மேலும் விவரங்களுக்கு www.indiapost.gov.in. என்ற தளத்தை அணுகலாம் என சென்னை நகர பிராந்திய தலைமை அஞ்சலக அதிகாரி நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.