சகிப்புத்தன்மையற்ற நீதிபதி

கேரளாவில் உள்ள பாலக்காடு அரசு மோயன் எல்.பி பள்ளியில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரபல மோகினியாட்டம் நடனக் கலைஞர் டாக்டர் நீனா பிரசாத்தின் மோகினியாட்டம்  நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த பள்ளிக்கு அருகில் வசிக்கும் பாலக்காடு மாவட்ட நீதிபதி கலாம் பாஷா,  அந்த நிகழ்ச்சி தனக்கு இடையூறாக இருப்பதால் அதனை உடனடியாக நிறுத்தகூறி ஏற்பாட்டாளர்களை வற்புறுத்தினார். மேலும், நீதிபதியின் உத்தரவின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் அந்த நிகழ்ச்சியை இடையிலேயே தடுத்து நிறுத்தினர். நிகழ்ச்சி இடையில் தடுக்கப்பட்டதால் கலைஞர்கள் மேடையில் அவமானப்பட்டு கண்ணீர் விட்டு அழுதனர். நீனா பிரசாத்தின் இது குறித்து கூறுகையில், “இது எனது நடன வாழ்க்கையில் கசப்பான அனுபவம். கொரோனா கட்டுப்பாட்டால் இரண்டு வருடங்களுக்கும் தடைபட்ட கலை நிகழ்ச்சிகள் நம்பிக்கையுடன் இப்போதுதான் துவங்கியுள்ளன. இப்படி நிறுத்தப்படுவது எனக்கு மட்டுமல்ல சக கலைஞர்களுக்கும் அவமானம்” என தெரிவித்தார். நீதிபதியின் செயலுக்கு கேரளாவெங்கும் உள்ள பல்வேறு கலைஞர்களும் கண்டனம் தெரிவித்தனர். பொதுவாக, கேரள மக்கள் எப்போதும் அதிகாரவர்க்கம், நீதிபதிகளை விட பாரம்பரிய கலைஞர்களுக்கு அதிக மரியாதையை தருபவர்கள். நீதிபதி கலாம் பாஷா சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, இவர் தனது மனைவிக்கு “முத்தலாக்” வழங்கி சட்டவிரோதமாக விவாகரத்து செய்தார். கலாம் பாஷாவும் அவரது சகோதரரும் கேரள உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியுமான பி கெமல் பாஷாவும் சேர்ந்து அந்த பெண்ணை, விவாகரத்துக்கு மறுத்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.