மிரட்டும் தி.மு.க நிர்வாகி

சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல், தி.மு.க பிரமுகரான இவர், தி.மு.க’வில் மல்லூர் நகர துணை செயலாளராக கடந்த 1971 முதல் 1976 வரை பொறுப்பில் இருந்துள்ளார். இவரது வீட்டின் ஒரு அறையை தி.மு.க கட்சி அலுவலகம் நடத்திக்கொள்ள சுரேந்திரன் என்பவருக்கு கடந்த 2003ம் ஆண்டு வாடகைக்கு கொடுத்துள்ளார். சுரேந்திரன் தற்போது தி.மு.க’வில் மல்லூர் பேரூர் கழக செயலாளராக உள்ளார். வயது முதிர்வு, வருமானத்திற்காக ஒரு கடை வைக்க எண்ணிய கதிர்வேர் தி.மு.க அலுவலகத்தை காலி செய்ய சுரேந்திரனிடம் 7 மாதம் முன்பாக கூறியிருந்தார். ஆனால், சுரேந்திரன் அந்த இடத்தை காலிசெய்ய மறுத்ததுடன், வாடகையும் தரவில்லை. மேலும், அந்த இடத்தை முழுவதும் தன்னிடம் கொடுத்துவிட்டு சென்றுவிடும்படி கூறியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினிடம் சென்றால்கூட என்னை ஒன்றும் செய்ய முடியாது. உன்னை குடும்பத்துடன் கொளுத்தி விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து கதிர்வேல், சுரேந்திரன் மீது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் புகார் அளித்துள்ளார். மூத்த தி.மு.க உடன்பிறப்பிடமே நிலஅபகரிப்பு செய்ய முயன்றுவரும் இளைய தி.மு.க உடன்பிறப்பால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.