முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதரத்துறை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கடந்த 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், திரையரங்குகள், கூட்ட அரங்குகள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், “தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அச்சமடையும் வகையில் இல்லை. மிதமான அளவில்தான் உள்ளது. தற்போதைய சூழலில் பெரிய அளவில் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய அவசியம் இல்லை. என்றாலும், முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது திரையரங்குகள், குளிர்சாதன வசதி கொண்ட அரங்குகள், மூடப்பட்ட அரங்குகள் உட்பட மக்கள் அதிகமாக கூடும் அரங்குகளில் இருப்பவர்கள் அனைவரும் முககவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், மூடப்பட்ட அறைகளில் அதிக நேரம் இருப்பதால் கொரோனா பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எனினும், இதை உத்தரவாக பிறப்பிக்காமல் அறிவுறுத்தலாக வழங்கியிருக்கிறோம். எனவே மக்கள் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும். முகக்கவசம் அணிவது கொரோனாவுக்கு மட்டுமின்றி, சுவாசநோய்கள் வராமல் இருப்பதற்கும் பாதுகாப்பானதாக இருக்கும்” என கூறினார்.