போதைமருந்து கும்பல் தலைவன் ஊடுருவல்

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “உலகின் மிகக்கொடிய போதைமருந்து கடத்தல் கும்பல் தலைவனான முகமது நாஜிம் முகமது இம்ரான் தனது கூட்டாளிகளுடன் இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. பாதுகாப்பு குறைபாடுகளையே இது காட்டுகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஹெராயின், கோகெய்ன் கடத்தல் கும்பல்களுடன் முகமது இம்ரானுக்கு வலிமையான பிணைப்பு உண்டு. 2019ம் ஆண்டில் துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட முகமது இம்ரான், பிணையில் விடுதலையான நிலையில் அங்கிருந்து தப்பியுள்ளான். தமிழகத்தில் போதைமருந்து கலாச்சாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் முகமது இம்ரானின் ஊடுருவல் தற்போதைய நிலைமையை மேலும் மோசமாக்கும். எனவே, முகமது இம்ரானை உடனடியாக கைது செய்து நாடு கடத்த வேண்டும்” என கூறியுள்ளார்.