பத்தாண்டுகளில் பாரதம் சிறப்பான வளர்ச்சி

கே.ஜி.அறக்கட்டளை சார்பில் ‘டைனமிக் இந்தியன் ஆப் தி மில்லேனியம்’, ‘பர்சனாலிட்டி ஆப் த டிகேட்’ விருதுகள் வழங்கும் விழா சரவணம்பட்டி கேஜி குழும வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடந்தது. கேஜி அறக்கட்டளை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் இதற்கு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, “விருது பெறும் மருத்துவர்கள், ஊடகத்துறையினர், தொழில்துறையினர் உள்ளிட்ட அனைவரும் அவர்கள் சார்ந்து இருக்கக்கூடிய துறைகளில் சமுதாயத்துக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர். நவீன பாரதம் உருவாவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களை கௌரவிப்பதால் எதிர்காலத்தில் மேலும் பலர் ஊக்கம் பெறுவார்கள். பாரதம் தற்போது மிகச்சிறந்த ஆளுமையின் கீழ் கடந்த பத்தாண்டுகளில் அனைத்து துறைகளிலும் சிறப்பான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. இன்று, உலகின் மையமாக பாரதம் திகழ்கிறது. உலகளவில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய தகுதியை நமது நாடு கொண்டு விளங்குகிறது. பெண்கள் அதிகாரமளித்தலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. சமூக நீதியைப் பற்றி நாம் பேசிவரும் நிலையில், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்தது, பஞ்சாயத்து கூட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவராக தேர்வு செய்யப்பட்ட போதும் உரிய மரியாதை அளிக்கப்படாதது, படியல் சமூகப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்களில் 93 சதவீத குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர் என்பது உள்ளிட்ட செய்திகள் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகின்றன. ஜாதி, மத, இன பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். 2047ல் நாம் நூறாவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் போது உலகின் தலைசிறந்த நாடாக பாரதம் திகழும்” என கூறினார்.