ஜி 20 தலைமையேற்கும் பாரதம்

இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி 20 சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சர்கள் இணை மாநாட்டில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கலந்துகொண்டார். கூட்டத்தின் நிறைவு நாளில் பேசிய அவர், “2022ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் ஜி 20 தலைவர் பதவியை பாரதம் ஏற்கும். உலகளவில் வலுவான மீட்பு மற்றும் பின்னடைவுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். நிலையான வளர்ச்சிக்கான 2030 செயல் திட்டத்தின் இதயமாக இருப்பது இதுதான். வளர்ச்சி இலக்குகளை நோக்கி நாம் செல்ல வேண்டும். பருவ நிலை மாற்றம் என்பது உலகளாவிய நிகழ்வாக இருந்தாலும், அதன் எதிர்மறையான தாக்கங்கள் வளரும் நாடுகளில் உள்ள ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்கள், அதிகளவில் தாக்கத்திற்கு ஆளாகின்றனர். நாம் இயற்கை வளங்களை அதிகம் சார்ந்திருக்கிறோம். ஆனால் பருவநிலை மாறுபாடு மற்றும் அதன் தாக்கத்தை சமாளிக்கும் திறன் குறைவாக உள்ளது. வளரும் நாடுகளில் இருந்து குறைந்த பட்ச பங்களிப்பு செய்தவர்கள் புவி வெப்பமயமாதலின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சி.ஓ.பி  26ல் உலக தலைவர்கள் உச்சி மாநாட்டில் நிலையான வளர்ச்சிக்கு புதிய மந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். கார்பன் அளவு குறைக்கப்பட்ட சுத்தமான எரிசக்தி, மற்றும் திறமையான தொழில்துறை வளர்ச்சி, நிலையான விவசாயம் ஆகியவற்றிற்கான பாரதத்தின் முயற்சியானது அனைவருக்கும் நிலையான வாழ்க்கையை உறுதிப்படுத்துகிறது” என தெரிவித்தார்.