ஊரடங்கில் அதிகரிக்கும் மணல் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த ஒதலவாடி கிராமத்தில் உள்ள செய்யாறு ஆற்றுப் படுகையில் அதிகாலையில் மணல் கடத்தலில் சிலர் ஈடுபட்டுள்ளதாக வருவாய்த்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, சேத்துப்பட்டு வட்டாட்சியர், சேத்துப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் ஆற்றுப் படுகையில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். அதிகாரிகள் வருவதை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அங்கு அதிகாரிகள் 6 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவர்கள் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.