ஆம் ஆத்மிக்கு அதிகரிக்கும் நெருக்கடி

டெல்லி மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் சத்யேந்தர் ஜெயினுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்ட செய்திகளும் வீடியோக்களும் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஒரு பாலியல் குற்றவாளி அமைச்சருக்கு மசாஜ் செய்வது, ஓட்டல்களில் இருந்து மிக உயர்தர உணவு வகைகள் வழங்கப்படுவது உள்ளிட்ட வீடியோக்கள் வெளியாகி வைரலானது. இதுகுறித்த அமலாக்கத் துறையின் புகாரையடுத்து சிறை கண்காணிப்பாளர் அஜித் குமார் உட்பட 12க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த சூழ்நிலையில், கடந்த செப்டம்பர் 12ம் தேதி இரவு 8 மணிக்கு பதிவான ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறை அறையில் உள்ள ஜெயினுடன் சாதாரண உடையணிந்த 3 நபர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அடுத்த சில நிமிடங்களில் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள கண்காணிப்பாளர் அஜித் குமார் அங்கு வருகிறார். அதையடுத்து அங்கிருந்த 3 பேரும் வெளியேறுகின்றனர். பின்னர் அஜித் குமாரும் ஜெயினும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்படி, அடுத்தடுத்து வெளியாகும் வீடியோக்கள் ஆம் ஆத்மி அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.