புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு

தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, அதற்கு பதிலாக சென்டிரல் விஸ்டா கட்டுவதற்கு மத்தியஅரசு முடிவு செய்தது. இதனையடுத்து, டெல்லியில் பிரம்மாண்டமாக ரூ. 970 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சென்டிரல் விஸ்டா என்ற புதிய நாடாளுமன்ற கட்டடம் வரும் மே 28ம் தேதி திறக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனை திறந்து வைக்க உள்ளார். இதற்கு கடந்த 2020ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனுடன் சேர்த்து முன்னர் ராஜபாதை என அழைக்கப்பட்ட கடமைப்பாதை சீரமைப்பு, பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம், அலுவலகம், துணை குடியரசுத் தலைவருக்கான புதிய மாளிகை உள்ளிட்ட புதிய கட்டுமானங்களும் சென்டிரல் விஸ்டாவின் ஓர் அங்கமாக இணைத்து கட்டப்பட்டது. சென்டிரல் விஸ்டாவில் பாரதத்தின் ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரம்மாண்ட அரசியல் சாசன அரங்கு, வாகன பார்க்கிங் வசதி, கேன்டீன் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவையில் 888 இருக்கைகளும் மாநிலங்களவையில் 300 இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற கூட்டுக் கூட்டங்களை மக்களவையில்நடத்துவதற்கு வசதியாக அங்கு மொத்தமாக 1,280 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் மக்களவையில் 543 இருக்கைகளும் மாநிலங்களவையில் 250 இருக்கைகளும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்துவைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முறைப்படி அழைப்பு விடுத்தார். எனவே, அடுத்து வரும் மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடமான சென்டிரல் விஸ்டாவில் நடைபெறும் என நம்பலாம். 100 ஆண்டுகள் பழமையான தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் பாரம்பரிய சின்னமாக பராமரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.