காசி தமிழ் சங்கமம் துவக்கம்

காசிக்கும் தமிழகத்துக்கும் இடையிலான கலாசார தொடர்பை புதுப்பிக்கும் நோக்கில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தேசத்தின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக இந்நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார். வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தின் அரங்கத்தில் தொடக்கவிழா நடைபெறுகிறது. ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வுடனும், தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் முன்னிலைப்படுத்தும் நோக்கிலும் காசிக்கும், தமிழகத்துக்கும் இடையிலான பல்லாயிரம் ஆண்டு கால பழமையான நாகரீக தொடர்பை மீண்டும் உயர்ப்பிக்கும் விதமாகவும் இந்த காசி தமிழ் சங்கமம் நடக்கிறது. இந்நிகழ்ச்சி, அடுத்த மாதம் 16ம் தேதிவரை ஒரு மாத காலத்துக்கு நடக்கிறது. இதில் கருத்தரங்குகள், கல்வி சார்ந்த உரையாடல்கள், விவாதங்கள் போன்றவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்காக தமிழகத்தில் இருந்து வாரணாசிக்கு 13 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 2 ஆயிரத்து 592 பேர் பயணம் செய்கிறார்கள்.