புறக்கணித்த சர்வதேச ஊடகங்கள்

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் இஷான் பிரகாஷ், தனது டுவிட்டர் பதிவில், ‘ராஜஸ்தானின் உதய்பூரில் கன்னையா லால் முஸ்லிம் மத வெறியர்களால் கொடூரமாக கொல்லப்பட்டதைப் பற்றி 5 விரிவான வீடியோ செய்திகளை தயாரித்தது. அதனை தனது கூட்டாளியும் உலகின் மிகப்பெரிய செய்தி நிறுவனமுமான தாம்சன் ராய்ட்டர்ஸ் மூலம் சர்வதேச ஊடக நிறுவனங்களுக்கு வழங்கியது. எனினும், பல மேற்கத்திய ஊடகங்கள் அந்த செய்திகளை வெளியிடாமல் புறக்கணித்தன’ என வேதனை தெரிவித்துள்ளார். பிரகாஷ் குறிப்பிட்டதில் பி.பி.சி, வாஷிங்டன் போஸ்ட் போன்ற பிரபல மேற்கத்திய செய்தி நிறுவனங்களும் அடங்கும். வேகோ டிரிபியூன் ஹெரால்ட் என்ற செய்தி நிறுவனம் ஒருபடி மேலே சென்று ‘ஆழ்ந்த மதத் துவேஷத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டில் வியக்கத்தக்க வகையில், வகுப்புவாத வன்முறையின் அதிகரிப்பை இது பிரதிபலிக்கிறது’ என்று செய்தியை திரித்து வெளியிட்டது. இதுகுறித்து சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்துள்ள பொதுமக்கள், பாரதம் குறித்த செய்திகளை வெளியிடும்போது மேற்கத்திய ஊடகங்கள் தங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடக அரசியல் நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றன. ஊடகத்துறையை ஆக்கிரமித்துள்ள இடதுசாரிகள் மற்றும் தாராளவாதிகளின் நிலைப்பாடு மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது என குற்றம்சாட்டி வருகின்றனர்.