அறியாமையா விஷமத்தனமா?

தமிழ்நாடு பாரதீய கிசான் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர், சி.எஸ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டெல்லி அருகில் நடைபெற்று வரும் வேளாண் சட்டத்துக்கு எதிரான விவசாய போராட்டத்தை முன்னெடுத்து வருபவர் ராகேஷ் திகாயத். ‘பாரதிய கிசான் யூனியன்’ என்ற அமைப்பின் தலைவரான அவர், டெல்லி போராட்டத்துக்கு ஆதரவு கோரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை 09.06.2021 அன்று சந்தித்துள்ளார். தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த அதற்கான புகைப்பட விளக்கத்தில், பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகாயத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான செய்தி. எங்கள் அமைப்பின் தலைவர்கள் யாரும் மமதா பானர்ஜியை சந்திக்கவில்லை.

ஹரியானாவில் சில மாநிலங்களின் விவசாய அமைப்புகளை ஒன்றிணைத்து முன்னாள் பிரதமர் சரண் சிங் தலைமையில் பாரதிய கிசான் யூனியன் தொடங்கப்பட்டது. நெருக்கடி காலத்தில் ஊழலுக்கு எதிராக போராடிய பாரதிய கிசான் யூனியன், பின்னர் பல பிரிவுகளாக உடைந்து, தற்போது ஹரியானா மாநில விவசாயத் தரகர்களின் பிடியில் சிக்கியுள்ளது. இந்த அமைப்பிற்கும் எங்களது  பாரதீய கிசான் சங்கத்துக்கும் இடையே எந்தவித சம்மந்தமும் இல்லை.

தேசிய சிந்தனையாளர் ஸ்ரீ தத்தோபந்த் தெங்கடியால் 1979ல் தொடங்கப்பட்ட பாரதிய கிசான் சங்கம், பாரதம் முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயத் தரகர்களின் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை. மத்திய வேளாண் சட்டத்தின் சீர்திருத்தங்களை பாரதிய கிசான் சங்கம் நிபந்தனைகளுடன் வரவேற்றுள்ளது. மேற்கூறிய செய்தியில் பாரதிய கிசான் யூனியன் என்ற வார்த்தையுடன் டெல்லி போராட்டத்தில் எங்கள் அமைப்பைத் தொடர்புப்படுத்துவது விஷம வேலையாக இருக்குமோ என்றும் கருத வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ் ஊடகங்கள் விழிப்புணர்வுடன் செய்தி வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்’ என தெரிவித்துள்ளார்.