இன்னொரு மகனையும் ராணுவத்துக்கு அனுப்புவேன்

காஷ்மீரில் ரஜோரி நகருக்கு அருகே உள்ள ராணுவ முகாம் மீது இரண்டு நாட்களுக்கு முன் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த சம்பவத்தில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த சம்பவத்தில் தேசத்துக்காக உயிர்த்தியாகம் செய்த 4 ராணுவ வீரர்களில் ஒருவர், மதுரை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன். லட்சுமணனின் சொந்த ஊர் திருமங்கலம் அருகே உள்ள தும்மக்குண்டு ஊராட்சி டி.புதுப்பட்டி. அவர் உயிரிழந்த சம்பவம் அவரது பெற்றோர், குடும்பத்தினர் மட்டுமில்லாது மொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், லட்சுமணனின் தந்தை தர்மராஜ், “நாட்டிற்காக என் மகன் உயிர் நீத்தது பெருமையே. இரண்டு மகன்களில் ஒரு மகனை நாட்டுக்காக கொடுத்தேன். அதேபோன்று இன்னொரு மகனையும் நாட்டுக்காக சேவை செய்ய அனுப்புவேன்” என்று தெரிவித்துள்ளார்.