தமிழகத்தில் அனைவருக்கும் வீடு திட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி என்.வி.என் சோமு, நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதில் அளித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணையமைச்சர் கௌஷல் கிஷோர், “நிலம் மற்றும் குடியிருப்புகள் அமைப்பது போன்றவை மாநில அரசின் நிர்வாகத்துக்கு உட்பட்டவை. எனினும், ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் மாநில அரசின் வீட்டு வசதி திட்டங்களுக்கு துணைபுரிந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிரதம மந்திரியின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு நிதி உதவியும் தொழில்நுட்ப உதவியும் அளிக்கப்படுகிறது. 2015ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்படி, நகர்ப்புறங்களில் வசிக்கும் தகுதியுள்ள குடும்பத்தினருக்கு தனி வீடு கட்டவும், கூட்டாக சேர்ந்து வீடு கட்டவும், குடிசைப் பகுதிகளை மேம்படுத்தவும் மானியம் அளிக்கப்படுகிறது. மற்றும் மானியத்துடன் கூடிய கடன் வசதியும் அளிக்கப்படுகிறது.பிரதம மந்திரியின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் தற்போதைய திட்டங்களுக்கான கால வரையறை டிசம்பர் 2024 வரை நீட்டிக்கப்படுள்ளது.அதற்குள் திட்டமிட்டபடி நாடு முழுக்க வீடுகள் கட்டிமுடிக்கப்படுவதை மத்திய அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து உறுதிப்படுத்தும். ஒவ்வொரு மாநில அரசிடம் இருந்தும் பயனாளிகள் பட்டியல், விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்ட பின், உரிய ஆய்வுகளுக்குப் பிறகு 40, 40 மற்றும் 20 சதவீதம் என மூன்று கட்டங்களாக மாநில அரசுகள் மூலம் பயனாளிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. இதன்படி தமிழக அரசிடம் இருந்து திட்ட அறிக்கை பெறப்பட்டு இதுவரை 6.88 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதில் 6.30 லட்சம் வீடுகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.அதில் 4.81 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த 11,260 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 8,644 கோடி ரூபாய் நிதி மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.