அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி

பாரதத்தின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதலாவது கூட்டத்தில் பிரதமர் உரை நிகழ்த்தினார். அப்போது அவர், “பாரதத்தின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் அமைச்சகங்கள் அளவில் நடைபெறும் முதல் கூட்டம் இது. மோசமான பொருளாதார சூழல்களை உலகம் சந்தித்து வரும் வேளையில் உலகளாவிய நிதி மற்றும் பொருளாதார தலைமைத்துவத்தின் பிரதிநிதியாக கூட்டத்தின் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா பெருந்தொற்று மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தில் அதன் தாக்கங்கள், அதிகரித்து வரும் புவி- அரசியல் நிகழ்வுகள், உலகளாவிய விநியோகச் சங்கிலி இடையூறுகள், விலையேற்றம், உணவு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு, ஏராளமான நாடுகளைப் பாதிக்கும் வகையில் நிலையற்ற கடன்கள், விரைவான சீர்திருத்தம் மேற்கொள்ள இயலாத காரணத்தால் சர்வதேச நிதி நிறுவனங்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருவது போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம். சர்வதேச பொருளாதாரத்தில் நிலைத்தன்மை, நம்பிக்கை மற்றும் வளர்ச்சியை மீண்டும் கொண்டு வருவது என்பது, உலகின் முன்னணி பொருளாதாரங்கள் மற்றும் நிதி அமைப்புமுறைகளின் பாதுகாவலர்களை சார்ந்துள்ளது. துடிப்பான பாரதப் பொருளாதாரம் மீது உலகின் கவனம் அதிகரித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து இந்திய நுகர்வோர் மற்றும் தயாரிப்பாளர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதே நேர்மறை உணர்வை சர்வதேச அளவில் வெளிப்படுத்தி உறுப்பினர்கள் எழுச்சி பெறுவார்கள் என்று நம்பிகிறேன்.

உலகளவில் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய மக்கள் குறித்து விவாதங்களில் கவனம் செலுத்துங்கள், அனைவரையும் உள்ளடக்கிய திட்டத்தை உருவாக்குவதன் வாயிலாக மட்டுமே உலகின் நம்பிக்கையை சர்வதேச பொருளாதார தலைமைத்துவம் மீண்டும் கொண்டு வர இயலும். ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்’ என்ற உள்ளடக்கிய தொலைநோக்குப் பார்வையை எங்களது ஜி20 தலைமைத்துவத்தின் கருப்பொருள் ஊக்குவிக்கிறது. பருவநிலை மாற்றம் மற்றும் அதிகக் கடன் நிலைகள் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கு பலதரப்பு வளர்ச்சி வங்கிகளை வலுப்படுத்துவது அவசியம். நிதித் துறையில் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணப் பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டன. டிஜிட்டல் நிதியில் ஸ்திரமின்மை மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயத்தை கட்டுப்படுத்த தர நிலைகளை உருவாக்கும் அதே வேளையில், தொழில்நுட்பத்தின் ஆற்றலை ஆராய்ந்து பயன்படுத்த உங்களை கேட்டுக் கொள்கிறேன். கடந்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் கட்டண சூழலியலில் மிகுந்த பாதுகாப்பான, நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் அதீத செயல்திறன் கொண்ட பொது டிஜிட்டல் உள்கட்டமைப்பை பாரதம் உருவாக்கியுள்ளது. எங்களது டிஜிட்டல் கட்டணச் சூழலியல் விலையில்லா பொது நல சொத்தாக உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஆளுகை, நிதி உள்ளடக்கம் மற்றும் எளிதான வாழ்க்கைமுறையை இது பெருவாரியாக மாற்றி அமைத்துள்ளது. யு.பி.ஐ போன்ற உதாரணங்கள் ஏராளமான இதர நாடுகளுக்கும் மாதிரியாக செயல்படலாம். எங்களது அனுபவங்களை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைவதோடு, இதன் உந்துசக்தியாக ஜி20 செயல்படக்கூடும்” என்று தெரிவித்தார்.