உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத அரசு

சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.சொக்கலிங்கம் என்பவர், குருமன் சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் என ஜாதிச்சான்று வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் விதிகளை வகுக்கக் கோரி தமிழக அரசுக்கு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை அரசு பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுப்ரமணியன், கே. குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு, “பட்டியலினத்தவர் அல்லது பழங்குடியினர் சாதிச் சான்றுகள் வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே விதிகளை வகுத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றமும் விதிகளை வகுத்துள்ளது. அதன்படி மாநில அளவில் ஜாதிச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். போலி சான்றிதழ்கள் தொடர்பான புகார்கள் குறித்து விசாரிக்க கண்காணிப்பு பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். பட்டியலினத்தவர், பழங்குடியினர் என பொய் சொல்லி ஜாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது வழக்கு தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மானுடவியல் அறிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சான்றிதழ்கள் வழங்கக்கூடாது. பெற்றோர், உடன்பிறந்தோருக்கு ஏற்கனவே சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இருந்தால், அதன் அடிப்படையில் விண்ணப்பிப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்க மறுக்க முடியாது. ஜாதிச் சான்றிதழ் கோரும் உண்மையான விண்ணப்பதாரர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சான்றிதழ் பெறும் வகையிலும், போலி சான்றிதழ்கள் பெறுவதைத் தடுக்கும் வகையிலும் 8 வாரங்களில் தமிழக அரசு விதிகளை வகுத்து வெளியிட வேண்டும்.போலி சான்றிதழ்களை பெறுவதை தடுக்க உரிய சட்டம் இயற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை தமிழக அரசு சட்டம் இயற்றவில்லை. ஜாதிச் சான்று வழங்கக்கூடிய அதிகாதிகளுக்கு நீதிமன்றங்களின் தீர்ப்புகள் குறித்து விழிப்புணர்வு வகுப்புகளை நடத்த வேண்டும். தகுதியில்லாதவர்களுக்கு ஜாதிச் சான்று வழங்குவதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்” என்று உத்தரவில் தெரிவித்தனர்.