விடைபெற்ற காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் நடைபயணம் பற்றி பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறுகையில், “காங்கிரஸ் கட்சி இந்திய மக்களிடம் இருந்து விடை பெற்றுவிட்டது. இல்லாத ஊருக்கு வழி தேடுவதை போல, இல்லாத ஒரு கட்சிக்காக ஊர் ஊராக ராகுல் நடைபயணம் செல்கிறார். இந்த நடைபயணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. கடைசியில் மிஞ்சப்போவது ஏமாற்றம் மட்டுமே. கன்னியாகுமரியில் தொடங்கி 9 மாநிலங்களை கடந்து விட்டதாக ராகுல் சொல்கிறார். அவர் சென்றதும் மக்களும் அவரை மறந்து விட்டார்கள். அவர் நடைபயணம் சென்று கொண்டிருக்கும்போது தான் குஜராத்தில் தோல்வி, டெல்லியில் தோல்வி என்ற தகவலும் அவருக்கு கிடைத்தது. அவரது நடைபயணத்தில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருந்தால் வாக்களித்து வெற்றிபெற செய்து இருப்பார்கள். புதிதாக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற கார்கே அடித்த ‘டைமிங்’ காமெடி தான். காங்கிரஸ் தலைவர்களின் உண்மையான முகத்தை வெளிக்காட்டியது. உலகமே மீண்டும் கொரோனா அலை பீதியில் உள்ளது. அதற்காக மத்திய அரசு எடுத்துள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கையை, டெல்லியில் ராகுல் நடைபயணத்தை முடக்க செய்யும் சதி வேலை என்கிறார் கார்கே. இப்படித்தான் ஒவ்வொருவரும் ராகுலிடம் நல்ல பெயரை வாங்குவதற்காக அவரை சுற்றி இருந்து ஜால்ரா தட்டுவார்கள். கொரோனா கட்டுப்பாட்டையே அரசியலாக்கும் இவர்களுக்கு மக்கள் மீது எந்த அக்கறையும் கிடையாது. நாடாளுமன்றத்துக்குள் செல்லவே முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதே? அதை ஏன் விமர்சிக்கவில்லை. மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. நமக்கு அரசியல் செய்ய வேண்டும் என்ற குறுகிய எண்ணம்தான் இது. இதுதான் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு காரணம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பெரிய மாற்றம் வரும். தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்து இருப்பதாக தி.மு.க.வே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது. எனவே தமிழகத்திலும் இனி காங்கிரசுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது, படுதோல்வியே கிடைக்கும்” என கூறினார்.