குஜராத்தில் பொது சிவில் சட்டம்

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தங்கள் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால் மாநிலத்தில் பொது சவில் சட்டம் கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. இதற்காக ஒரு குழுவையும் அப்போதே குஜராத் மாநில பா.ஜ.க நியமித்தது. தேர்தலில், மொத்தமுள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 156 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்று குஜராத்தில் இதற்கு முன் எந்த கட்சியும் பெறாத வெற்றியை பெற்று சாதனை படைத்தது. இதையடுத்து, குஜராத்தில் முதல்வராக பூபேந்திர படேல் மீண்டும் பொறுப்பேற்பார் என அக்கட்சி அறிவித்தது. பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்றத் தலைவராக பூபேந்திர படேல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, அவர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பூபேந்திர படேல் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதனிடையே, குஜராத் பா.ஜ.க சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து பூபேந்திர படேல், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது குஜராத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “குஜராத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.