ஜி 20 உலகுக்கு பாரதத்தை எடுத்துக்காட்டும்

நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில், பாரத வெளியுறவுக் கொள்கை தொடர்பாக பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், “வெளிநாடு வாழ் பாரத மக்களின் நலனுக்கான இரண்டு நாள் மாநாடு, இரண்டு ஆண்டு இடைவெளியில் வரும் ஜனவரி மாதம் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த மாநாட்டில், கயானா அதிபர் இர்பான் அலி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஜி 20 கூட்டங்கள் பாரதத்தில் ஏற்கனவே துவங்கி விட்டது. அதில், 200 கூட்டங்களை பாரதத்தின் பல்வேறு இடங்களில் நடத்த ஏற்பாடு செய்வதே எங்களின் முயற்சி. ஜி20 மாநாடு, பாரதத்தால் நடத்தப்படும் மிக உயர்ந்த சர்வதேச கூட்டமாக இருக்கும். இதனை ஒரு தேசிய முயற்சியாகவே பார்க்கிறோம். இதில் பாரத வரலாற்றை பகிர்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பாரதம் தலைமையில், ஒருமித்த கருத்தை உருவாக்கி நிகழ்ச்சியை வடிவமைக்க முயற்சிக்கப்படுகிறது. இந்த கூட்டம், உலகுக்கு பாரதத்தை எடுத்துக்காட்டும். வெளியுறவு கொள்கை என்பது, அமைச்சகத்தின் செயல்பாடு அல்லது அரசின் சாதாரண செயல்பாடுகள் அல்ல. இது அனைத்து பாரத மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சவாலான சூழ்நிலையில் நமது மக்களின் நலனை உறுதி செய்யவேண்டும் என்பதே எங்கள் முயற்சி. அந்த பொறுப்பை நிறைவேற்ற என்ன வேண்டுமானாலும் செய்வோம். ரஷ்யாவிடம் தான் கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என நாங்கள் கூறவில்லை. ஆனால், சிறந்த வாய்ப்புகள் எங்கு உள்ளதோ அங்கு வாங்கும்படி கூறினோம். நமது மக்களின் நலனுக்காக சிறந்த ஒப்பந்தம் கிடைக்கும் இடத்திற்கு செல்வது விவேகமான கொள்கை. எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் தன்னிச்சையாக மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கையை ஏற்று கொள்ள மாட்டோம் என சீனாவிடம் தெளிவாக கூறி விட்டோம். ஆனால், அவர்கள் அதனை தொடர்ந்து செய்து படைகளை குவிப்பது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வழக்கமானதாக இல்லை என்று அர்த்தம். கடந்த சில நாட்களாக இது தெரிகிறது” என்று பேசினார்.