திரையரங்கத்தில் நரிக்குறவர் சமூக மக்கள்

நடிகர் சிம்பு நடித்த ‘பத்து தல’ திரைப்படம் திரையரங்கில் வெளியானது. இந்த படத்தை காண நரிக்குறவர் சமூக மக்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்கிற்கு வந்துள்ளனர். அப்போது திரையரங்கில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என புகார் எழுந்தது. திரையரங்கிற்கு படம் பார்க்க வந்த நரிக்குறவர் சமூக மக்களை அனுமதிக்கவில்லை என சமூக வலைதளங்களில் விஷமத்தனமாக பரப்பப்பட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திரையரங்க நிர்வாகம் கூறுகையில், “பத்து தல திரைப்படம் “யு/ஏ” சான்றிதழ் கொண்ட திரைப்படமாகும். சிறுவர்கள் இந்த படத்தை காண அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மக்கள், தங்களுடன் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களை அழைத்து வந்ததால், சிறுவர்களை ஊழியர் அனுமதிக்கவில்லை. ஆனால், இந்த விவகாரம் வேறு விதமாக புரிந்துகொள்ளப்படுவதால், பின்னர் அவர்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். நாளை விடுதலை திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு “ஏ” சான்றிதல் வழங்கப்பட்டுள்ளதால், அந்த படத்திற்கும் சிறுவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற நடைமுறையே பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கும் அவர்களை ஏன் அனுமதிக்கவில்லை என்பது குறித்து அந்தத் திரையரங்கம் விளக்கம் அளித்துள்ளது.