ஆசிரியை கட்டாய மதமாற்றம்

பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவா மாகாணம் புனெர் மாவட்டத்தில் வசிக்கும் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இளம் ஆசிரியை ஒருவர், கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பின்னர் அந்த பெண்ணை கடத்தியவருக்கே அவரை திருமணம் செய்துவைத்துள்ளனர் அங்கு பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம் சமூகத்தினர். இதையடுத்து அங்குள்ள சிறுபான்மை சீக்கிய சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் இக்பால் சிங் லால்புரா கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள ஜெய்சங்கர், “இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்தவுடன் அதனை பாகிஸ்தான் அரசிடம் பாரதம் கொண்டு சென்று தனது கண்டனத்தை தெரிவித்தது. அது குறித்து உண்மையான விசாரணை நடத்த வேண்டும். கட்டாய மதமாற்றத்திற்கு காரணமானவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் சமூகத்தினருக்கும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.