மக்கள் நலத் திட்டங்களுக்காக ரூ. 8 லட்சம் கோடி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட தென்கடப்பந்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில், மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய மத்திய மக்கள் தொடர்பக  கூடுதல் தலைமை இயக்குநர் மா. அண்ணாதுரை, “மத்திய அரசில் வெவ்வேறு துறை சார்ந்த பெரும் எண்ணிக்கையிலான திட்டங்கள் இருந்தது. தற்போது அரசு அவற்றையெல்லாம் முறைப்படுத்தி 157 திட்டங்களாக செயல்படுத்தி வருகிறது. மக்கள் நலனுக்கென, ஆண்டொன்றிற்கு இந்தத் திட்டங்களுக்காக மட்டுமே சுமார் 8 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட்டு வருகிறது” என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர், “அனைவரும் வாழ்க்கையில் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற தொழில் முனைவோராக உருவெடுக்க மத்திய அரசு வங்கிகள் மூலம் கடன் உதவிகளை வழங்கி வருகிறது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு தங்களது வாழ்க்கையில் முன்னேற வேண்டும்” என கூறினார். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய தொகுப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் 15 சுய உதவி குழுக்களுக்கு 1 கோடியே 9 லட்சம் ரூபாய் கடன் உதவி மற்றும் 35 நபர்களுக்கு 50 லட்சத்து 75 ஆயிரம் தாட்கோ கடன்கள் வழங்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படுத்திப்பட்டு வரும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திட்டத்தில், பிளாஸ்டிக் கழிவுகளை துகள்களாக்கி சாலைகள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அஞ்சல் துறையில் உள்ள திட்டங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் தரப்படும் திட்டங்கள், மாவட்ட முன்னோடி வங்கிகள் மூலம் தரப்படும் திட்டங்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டங்கள் என பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. ஊட்டச்சத்து இயக்கத்தின் வாயிலாக சிறந்த போஷாக்கு மிக்க குழந்தைகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் கல்லூரியில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.