நீர்நிலைகள் குறித்த முதல் கணக்கெடுப்பு

பாரத வரலாற்றில் முதன்முறையாக, தொலைநோக்குப் பார்வை கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தின் வழிகாட்டுதல்படி, மத்திய ஜல் சக்தி அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு, குளங்கள், ஏரிகள் என இயற்கையாலும் மனிதர்களாலும் உருவாக்கப்பட்ட நீர்நிலைகள் உட்பட பாரதத்தின் நீர் ஆதாரங்களின் விரிவான பட்டியலை வழங்குவதோடு, நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பு குறித்தத் தரவுகளையும் சேகரித்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து நீர்நிலைகளின் விரிவான தரவுகளை அறிய, 6வது சொட்டு நீர்ப்பாசன கணக்கெடுப்புடன் இணைந்து, இந்த “நீர்ப்பாசனக் கணக்கெடுப்பு” தொடங்கப்பட்டது.

நீர்நிலைகளின் வகை, ஆக்கிரமிப்புகளின் நிலை, பயன்பாடு, சேமிப்புத் திறன் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டன. இது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் பயன்பாட்டில் உள்ள மற்றும் பயன்பாட்டில் இல்லாத அனைத்து நீர்நிலைகளையும் உள்ளடக்கியது. பாசனம், தொழில், மீன் வளர்ப்பு, வீட்டுப் பயன்பாடு, பொழுதுபோக்கு, நிலத்தடி நீர் போன்ற நீர்நிலைகளின் அனைத்து வகையான பயன்பாடுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

நீர்நிலைகள் கணக்கெடுப்பின் முக்கிய அம்சங்களாக, நாட்டில் 24,24,540 நீர்நிலைகள் கணக்கிடப்பட்டுள்ளன, அவற்றில் 97.1 சதவீதம் (23,55,055) கிராமப்புறங்களிலும், 2.9 சதவீதம் (69,485) நகர்ப்புறங்களிலும் உள்ளன. நீர்நிலைகளின் எண்ணிக்கையில் மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, அசாம் ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் நாட்டின் மொத்த நீர்நிலைகளில் 63 சதவீதம் உள்ளன. நகர்ப்புறங்களில் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கையில் மேற்கு வங்கம், தமிழகம், கேரளா, உத்தரப் பிரதேசம், திரிபுரா மாநிலங்கள் முதல் 5 இடத்தில் உள்ளன. கிராமப்புறங்களில் மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, அசாம் ஆகிய மாநிலங்கள் முதல் 5 இடங்களைப் பெற்றுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு குறித்த அறிக்கை https://jalshakti-dowr.gov.in என்ற ஜல்சக்தித் துறையின் இணையதளத்தில் உள்ளது.