முத்தான நியமன எம்.பிக்கள்

நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் மொத்தம் 12 பேர் நியமன எம்.பி.க்கள். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்படுவது வழக்கம். அதனடிப்படையில் தற்போது இசைஞானி இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தடகள வீராங்கனை பி.டி.உஷா, தர்மசாலா கோவிலின் தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எம்.பிக்களாக நியமித்துள்ளார்.

வாழ்த்து: இளையராஜாவை வாழ்த்தி டுவிட்டரில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, “சாதாரண பின்னணியில் இருந்து வந்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார் இளையராஜா. இசையின் மூலம் மனித உணர்வுகளை அழகாய் பிரதிபலித்தவர். அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். இதேபோல அனைத்து உறுப்பினர்களுக்கும் தனிப்பட்ட முறையில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார் மோடி. பிரதமரின் வாழ்த்துக்கு பதிலளித்துள்ள இளையராஜா, “மோடிஜியின் எண்ணங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இசை, கலை மற்றும் கலாச்சாரத்தின் அழகை நம் சமூகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்பு இது” என்று குறிப்பிட்டுள்ளார். இளையராஜாவுக்கு கட்சி பேதமின்றி பல அரசியல் கட்சித் தலைவர்களும் திரைத்துறையினரும் பொதுமக்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இதேபோல நாட்டிற்கு முதல் பதக்கம் வாங்கித்தந்த பி.டி உஷா, அக்கால ஹிந்துக்களின் வாழ்வியலை தன் படங்கள் மூலம் அழகாக எடுத்துரைத்துவரும் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் போன்றவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எரிச்சலில் எதிர் தரப்பு: பிர்மண பர்கடே எனும் சமண பந்த் குடும்பத்தின் 21ம் தலைமுறை உறுப்பினரும் கர்நாடகாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற 800 வருடத்திற்கும் அதிகமான பழமைமிக்க தர்மசாலா கோயிலின் தர்மாதிகாரியுமான இவரது நியமனம்தான் பா.ஜ.கவிற்கு எதிராக அரசியல் செய்யும் எதிர்தரப்பினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஹெக்டேகள் இன்றைக்கும் தர்மசாலாவிலே மன்றத்திலே அமர்ந்து நீதி வழங்குகிறார்கள். அது ‘ஹோயுலு’ என அழைக்கப்படுகிறது. இந்தப் பஞ்சாயத்துக்கள் இறைவன் மஞ்சுநாத சுவாமியின் சந்நிதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் நடைபெறும். ஹெக்டே குடும்பத்தினர், கோயிலில் இருந்து பெறப்பட்ட காணிக்கைகளை வைத்து பல தர்ம காரியங்களை செய்து வந்தனர். இதனாலேயே அந்த இடம் ‘தர்மஸ்தலம்’ என்ற பெயரை பெற்றது. இங்கு தினமும் அயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இன்றும் ஹெக்டே குடும்பத்தினருக்கு என்று தனி மரியாதை உள்ளது. இத்தகைய ஆன்மீக குடும்பத்தை சேர்ந்தவர் நாடாளுமன்ற உறுப்பினராவதால் எதிர் தரப்பினருக்கு எரிச்சல் வருவது இயற்கைதானே!?