பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய அரசு ஆதரவு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு எடுப்பதற்கான கூட்டம் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. அப்போது கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு நல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார்.

இந்த நலத்திட்டங்களை அறிவிக்குபோது பேசிய பிரதமர்மோடி, ‘நாட்டின் எதிர்காலத்தை குழந்தைகளே பிரதிநிதித்துவம் செய்கின்றனர். வலிமை மிக்க குடிமக்களாக குழந்தைகள் உருவாவதற்கும், ஒளிமயமான எதிர்காலம் கிடைப்பதற்கும் ஆதரவளித்து, அவர்களை பாதுகாக்க தேவையான அனைத்தையும் மத்திய அரசு செய்யும். கொரோனா தொற்றால் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து ஆதரவளிக்கப்படும்’ என பேசினார்.

இத்திட்டத்தின் மூலம் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் பெயரில் ரூ. 10 லட்சம் வைப்புத்தொகையை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் பி.எம் கேர்ஸ் அளிக்கும். இந்தத் தொகை 18 வயதில் இருந்து அடுத்த ஐந்து வருடங்களுக்கு உயர் கல்வியின்போது தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான உதவித் தொகையை வழங்கபயன்படுத்தப்படும். அவர்கள் 23 வயதை அடைந்தவுடன் தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த பயன்பாட்டிற்காக மொத்த பணமும் பயனாளிக்கு வழங்கப்படும்.

10 வயதுக்கு கீழுள்ள பள்ளி குழந்தைகளுக்கு அருகிலுள்ள கேந்திரிய வித்யாலயாவிலோ அல்லது தனியார் பள்ளியிலோ சேர்க்கை வழங்கப்படும். குழந்தைகள், தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டால் கல்வி உரிமை சட்டத்தின் படி பி.எம் கேர்ஸில் இருந்து கட்டணம் செலுத்தப்படும். அவர்களுக்கான சீருடை, பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்களுக்கான செலவையும் பிஎம் கேர்ஸ் ஏற்கும். 11 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு சைனிக் பள்ளி, நவோதயா பள்ளி போன்ற உண்டு உறைவிட மத்திய அரசு பள்ளிகளில் குழந்தைக்கு சேர்க்கை வழங்கப்படும்.

குழந்தை ஒருவேளை பாதுகாவலர், உறவினர்கள் பராமரிப்பில் இருந்தால் அவர்கள் வீட்டின் அருகிலுள்ள கேந்திரிய வித்யாலயாவிலோ அல்லது தனியார் பள்ளியிலோ சேர்க்கை வழங்கப்படும். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்காக ஏற்கனவே உள்ள கல்விக் கடன் விதிகளின்படி பாரதத்தில் தொழிற்கல்வி, உயர் கல்வி படிப்பதற்கான கல்விக் கடன் பெறுவதற்குஆதரவு வழங்கப்படும். இதற்கான வட்டியை பிஎம் கேர்ஸ் செலுத்தும். இளநிலை அல்லது தொழில் கல்விக்கான கட்டணத்திற்கு சமமான உதவித் தொகை மத்திய மாநில அரசு திட்டங்களின் கீழ் வழங்கப்படும். ஏற்கனவே உள்ள உதவித் தொகை திட்டங்களுக்கு குழந்தை தகுதியாக இல்லையெனில், அதற்கு சமமான ஊக்கத்தொகையை பி.எம் கேர்ஸ் வழங்கும். மேலும் 5 லட்சம் மருத்துவ காப்பீட்டுடன் கூடிய ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளிகளாக அனைத்து குழந்தைகளும் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு 18 வயதாகும்வரை பிரீமியம் தொகை பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து செலுத்தப்படும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.