காங்கிரஸாரை கண்டித்து உண்ணாவிரதம்

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்தத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன், “காங்கிரஸ்காரர்கள் கடந்த 3ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தி பேரணியாக சென்றபோது வழியில் உள்ள மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலகத்துக்குள் நுழைய முயற்சித்தனர். இதை அங்கிருந்த பா.ஜ.கவினர் தடுக்க முயன்ற போது மோதலாக மாறியுள்ளது. நமது சொத்தை பாதுகாப்பது நமது கடமை. அதைத்தான் பா.ஜ.கவினர் செய்துள்ளனர். இதை எப்படி தவறு என்று கூற முடியும்? ஊர்வலமாக செல்பவர்கள் எங்கு செல்கிறார்களோ அங்கே செல்ல வேண்டியதுதானே? ஏன் அவர்கள் பா.ஜ.க அலுவலகத்தை நோக்கி வர வேண்டும்? எனவே வன்முறையைத் தூண்டியது காங்கிரஸ் கட்சியினர்தான். தமிழக அரசின் காவல்துறை, தவறிழைத்த காங்கிரஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு, பா.ஜ.கவினர் மீது நடவடிக்கை எடுப்பது எந்த வகையில் நியாயம்? மேலும் மோதலில் ஈடுபட்டவர்கள் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளா என தெரியாது. இவர்கள் வெளி இடங்களில் இருந்து வந்துள்ளனர். வாடகைக்கு இவர்களை அழைத்து வந்து திட்டமிட்டு கலவரத்தில் இறக்கியுள்ளனர். இதை எதிர்பார்க்கவில்லை என்று காவல்துறை கூறுகிறது. இப்படி கூறுவதற்கு எதற்கு காவல்துறை உள்ளது? கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறை செயல் இழந்துவிட்டது. காவல்துறையினர் தங்களது மரியாதையை இழந்து வருகிறார்கள். தமிழக அரசும்காவல்துறையும் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கை காப்பாற்றி, மக்களுக்கு அமைதியான, நிம்மதியான வாழ்வை உறுதி செய்ய வேண்டும். அதனை செய்யத் தவறிய காவல்துறையினரையும், பா.ஜ.க அலுவலகம் மீதான காங்கிரஸாரின் தாக்குதலையும் கண்டித்து, இன்று (6ம் தேதி) நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு காலை 10 மணி முதல் பா.ஜ.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” என கூறினார்.