காலியாகும் கூடாரம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் கடந்த வெள்ளிக்கிழமை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். இது தொடர்பாக அவர் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்திருந்தார். காங்கிரஸை விட்டு விலகிய அவர், புதிய கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஜம்மு காஷ்மீரை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலர் ஆசாத்தை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த், முன்னாள் அமைச்சர்கள் அப்துல் மஜித் வானி, மனோகர் லால் சர்மா, கரு ராம், முன்னாள் எம்எல்ஏ பல்வான் சிங் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள் 64 பேர் நேற்று குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக காங்கிரஸை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர். “குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக நாங்கள் காங்கிரஸை விட்டு விலகுகிறோம். நாங்கள் கூட்டாக எழுதிய ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளோம்” என தெரிவித்துள்ளனர்.