புதிய கனவு, பெரிய கனவு காணுங்கள்

டெல்லி பல்கலைக் கழகத்தின் 99வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “டெல்லி பல்கலைக் கழகம் இந்தியாவை அதன் அனைத்து செழுமையிலும் பன்முகத்தன்மையிலும் பிரதிபலிக்கிறது. எந்த நிறுவனமும் அதற்கு கிடைத்துள்ள பெருமையினால் தனது வளர்ச்சி பணியை நிறுத்திவிட முடியாது. இன்றைய வேகமான மாற்றங்களின் உலகில், ஒரு நிறுவனம் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும். டெல்லி பல்கலைக் கழக சமூகம், நாட்டில் உள்ள பிற பல்கலைக் கழகங்களைச் சிறப்பான முறையில் வழிநடத்திச் செல்வதற்குக் கடமைப்பட்டிருப்பதாக உணர வேண்டும். அனைத்து மொழிகளையும் கலாச்சாரங்களையும் நாம் மதிக்க வேண்டும், வரவேற்க வேண்டும். ஆனால் எப்போதும் நமது வேர்களுடன் நாம் இணைந்திருக்க வேண்டும். புத்துணர்ச்சி மற்றும் படைப்பாற்றல் வேர்களில் இருந்து வருகிறது. எனது கிராமத்திலிருந்து கல்விக்காக நகரத்திற்குச் சென்றமுதல் பெண் நான்தான். உங்களது வகுப்புத் தோழர்களிலும், இதுபோன்ற பல மாணவர்கள் இருக்கலாம். அவர்களின் குடும்பம் அல்லது கிராமத்தைச் சேர்ந்த யாரும் அவர்களுக்கு முன் பல்கலைக் கழக அளவிலான கல்வியைப் பெற்றிருக்க மாட்டார்கள். அத்தகைய மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகள். அவர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்ற மிகுந்த ஆர்வத்துடன் பல்கலைக் கழகத்திற்கு வருகிறார்கள். எனினும், சில சமயம் தாழ்வு மனப்பான்மைக்கு பலியாகின்றனர். இது எந்த உணர்வுள்ள சமூகத்திலும் நடக்கக்கூடாது. இத்தகைய முதல் தலைமுறைப் பல்கலைக் கழக மாணவர்களை ஊக்கப்படுத்துவது ஆசிரியர்கள் மற்றும் பிற மாணவர்களின் பொறுப்பாகும். மாணவிகளுக்கான சுத்தமான கழிவறைகள், உலகத்தரம் வாய்ந்த ஆய்வகங்கள், உண்மையான தரமான கல்வி மற்றும் மாற்றுத் திறனாளிகளின் தேவைகள் போன்ற சில அடிப்படை விஷயங்கள் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். வளர்ச்சி மற்றும் நாகரீகம் என்ற நுகர்வோர் கருத்தாக்கத்தின் காரணமாக, மாசுபாடு, பருவநிலை மாற்றம், வாழ்க்கை முறை நோய்கள் போன்ற சவால்கள் மிகவும் வலிமையான வடிவத்தை எடுத்து வருகின்றன. நமது கடந்த தலைமுறையினர் பல நல்ல விஷயங்களைச் செய்திருந்தாலும் சில தவறுகளையும் செய்துள்ளனர். நல்ல விஷயங்களை முன்னெடுத்துச் செல்லவும், தவறுகளை களையவும் இளம் தலைமுறையினர் முயற்சிக்க வேண்டும். சிறந்த மனிதனை உருவாக்குவதே கல்வியின் பிரதான நோக்கமாகும். வாழ்க்கையில் பெரியவராக இருப்பது நல்லது ஆனால் நல்ல மனிதனாக இருப்பது மிகநல்லது. செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கையை கண்டுபிடிப்பது ஒரு நல்ல விஷயம். ஆனால் நல்ல சிந்தனையுடன் வாழ்க்கையில் நல்வாழ்வைத் தேடுவது இன்னும் முக்கியமானது. புதிய பாரதத்தையும் புதிய உலகத்தையும் உருவாக்க புதிய கனவு காணூங்கள், பெரிய கனவு காணுங்கள்” என மாணவர்களை அவர் வலியுறுத்தினார்.