ஆர்.டி.ஓ அலுவலகம் செல்ல வேண்டாம்

அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சியை முடித்தவர்கள், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் வாகனங்களை இயக்கிக் காட்டாமல் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஓட்டுனர் பயிற்சி பெற்றவர்கள், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனத்தை சரியாக ஓட்டிக் காட்டினால் மட்டுமே தற்போது லைசென்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறைகளில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள், 2 ஏக்கர் பரப்பளவில் பயிற்சி எடுப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். அவர்களிடம் பயிற்சி வாகன வடிவமைப்புடன் கூடிய வசதி இருக்க வேண்டும். பயிற்சியளிப்பவர், மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றவராக இருக்க வேண்டும். லைசன்ஸ் பெற விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்களுக்கு, போக்குவரத்து சின்னங்கள், விதிகள், வாகன கட்டமைப்பு, பொதுத் தொடர்பு, முதலுதவி உள்ளிட்ட வகுப்புகளை நடத்த வேண்டும். வாகனம் ஓட்டுவதற்கு கிராமம், நகரம், மேடு, பள்ளம் ஆகிய பகுதிகளில் சீராக ஓட்டுவது, வாகனத்தை பின் நோக்கி செலுத்துவது போன்றவற்றை கற்பிக்க வேண்டும். பயிற்சிக்கு பின், ‘சென்சார்’ ஓடுபாதையில் சோதனையில் வெற்றிகரமாக வாகனம் ஓட்டுவதை வீடியோ பதிவு செய்ய வேண்டும். இந்த சான்றுகளுடன் ஆர்.டி.ஓ., அலுவலகம் சென்று, வாகனம் ஓட்டிக் காட்டாமலேயே அவர்கள் லைசென்ஸ் பெறலாம். இந்த புதிய நடைமுறை, ஜூலை, 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.