தி.மு.க இருந்திருக்காது

பா.ஜ.க. மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமியின் பிறந்தநாள் விழா விராட் ஹிந்துஸ்தான் சங்கம் சார்பில் மதுரையில் நடந்தது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய சுப்பிரமணியன் சுவாமி, “அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வரும். நமது தேசத்தின் கலாசாரத்தை ஆங்கிலேயர்கள் அழித்ததால், பொருளாதாரத்தில் பின்தங்கிவிட்டோம். தற்போது அதிலிருந்து மீண்டு சொந்தக் காலில் நிற்கும் அளவுக்கு வளர்ந்துள்ளோம். ஆங்கிலேயர்கள் தான் திராவிடன், ஆரியன் என்று பிரிவினையை உண்டாக்கினார்கள். திராவிட் என்பதற்கு 3 கடலும் சங்கமிக்கும் இடம் என்று பொருள். தி.மு.க. தினமும் ஒவ்வொரு பொய் சொல்லி வருகிறது. அடுத்த சட்டமன்றத்தில் பா.ஜ.க. மாற்றுக் கட்சியாக இருக்கும். 4 வர்ணங்கள் என்பது ஒன்றுமில்லை. பாரதத்தில் உள்ள அனைத்து ஜாதியினருக்கும், மதத்தினருக்கும் ஒரே டி.என்.ஏ.தான் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி கற்றுக்கொண்டால் என்ன தவறு. ஹிந்தி கற்பவர்களை ஏன் தடுக்கிறீர்கள்? தி.மு.க.வினர் எதற்கெடுத்தாலும் பெரியார் என்று கூறுகிறார்கள். இன்று அந்த ஈ.வே.ரா இருந்திருந்தால் தி.மு.க.வே இருந்திருக்காது. ராமசாமி நாயக்கருக்கு ஈரோட்டில் அவருடைய அப்பா கோயில் கட்டிக் கொடுத்து, ராமசாமி அதனை பராமரிப்பார் என்று உயில் எழுதி வைத்தார். கோயிலை முறையாக பராமரித்ததற்காக 25 ஆண்டுகள் தொடர்ந்து முதல் பரிசை பெற்றிருக்கிறார் ராமசாமி. இது வீரமணிக்கு தெரியுமா? கோயில்களில் அனைவரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் போட்டுள்ளனர். எந்தக் கோயிலிலும் அரசு அதிகாரம் செலுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 32,000 கோயில்களையும் தி.மு.க அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதை விடுவிக்க வேண்டும். கோயிலைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? உண்டியல் பணத்தை எடுக்கத்தான் திட்டமிடுகிறார்கள். அனைத்து கோயில்களையும் சட்டப்படி மீட்டெடுத்து, பூஜாரிகள் கையில் கொடுப்பேன். அடுத்த சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு முன்பு தமிழகத்துக்கு அடிக்கடி வந்து தி.மு.க.வுக்கு எதிராக பிரசாரம் செய்வேன்” என்றார்.