தமிழ் பற்று நாடகமாடும் தி.மு.க

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 16 உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக இருப்பதால் நடப்பு கல்வியாண்டு முதல் பல்கலைக்கழகத்தின் 11 உறுப்புக் கல்லூரிகளில் பல்வேறு தமிழ் மற்றும் ஆங்கில வழி இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்தது. இதற்கு தமிழகமெங்கும் உள்ள பொதுமக்களும் தமிழ் ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக் கழகத்தின் 11 உறுப்புக் கல்லூரிகளில், தமிழ் வழியில் பொறியியல் கல்வி பாடப்பிரிவுகள் இருந்ததை, இந்த ஆண்டு முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். பிரதமர் கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை, நாடு முழுவதும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாய்மொழியில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்விகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று அறிவித்து, அதற்கான தொடர் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஆனால், தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் தி.மு.க அரசோ, தாய்மொழி குறித்து சிறிதும் சிந்திக்காமல், தமிழைத் தொடர்ந்து புறக்கணிக்கும் முயற்சிகளை மேற்கொள்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மாணவர்களிடையே தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் இருக்கும்போது, இது போன்ற அறிவிப்புகள் தாய்மொழிக் கல்வியை நீர்த்துப் போகச் செய்கிறது. தமிழ் மொழிப் பொறியியல் பாடப் பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்த ஊடகங்களின் கேள்விக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஒரு மாணவர் கூட தமிழ்வழிக் கல்வி பொறியியல் பிரிவில் சேரவில்லை என்ற மழுப்பலான காரணத்தைத் தெரிவித்துள்ளார். தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. அதனைச் செய்யத் தவறியது தி.மு.க அரசின் குற்றம். செய்யாத சாதனைகளுக்காக வீண் விளம்பரங்கள் செய்வதை நிறுத்தி விட்டு, தாய்மொழிக் கல்வியை ஊக்குவிப்பதில் முனைப்பு காட்ட வேண்டும் என்று பா.ஜ.க சார்பாக வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார். இந்நிலையில் பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கடும் கண்டனத்தால் அரசு இதில் பின்வாங்கியுள்ளது. இந்த உத்தரவு வாபஸ் பெறுவதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல் ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் நடப்பு கல்வியாண்டில் மேற்குறிப்பிட்ட கல்லூரிகளில் அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும் சேர்க்கை நடைபெறும், இதனை தற்காலிகமாக நிறுத்திவைப்பது குறித்து அடுத்த ஆண்டு முடிவு செய்வோம் என்றும் கூறியுள்ளார்.