இறை நம்பிக்கையுள்ள தமிழை அகற்றும் தி.மு.க

தமிழ்மொழி வளர்ச்சிக்கு தமிழக அரசு எதுவும் செய்யவில்லை என்று கூறி தமிழகம் முழுவதும் பா.ஜ.க சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கடலூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “ஈ.வெ.ராமசாமி நாயக்கர் 1965ல் ‘ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரால் நடந்த காலித்தனம், ஆரம்பத்திலேயே 4 காலிகளை சுட்டிருந்தால், இத்தனை நாசவேலைகளும், இத்தனை உயிர்ச்சேதமும், இத்தனை உடைமைகள் சேதமும் ஏற்பட்டிருக்காது. எதற்காக சட்டம், எதற்காக போலீஸ், எதற்காக போலீஸ் கையிலே தடி, எதற்காக போலீஸ் கையிலே துப்பாக்கி, முத்தம் கொடுக்கவா, இது என்ன அரசாங்கம்?’ என்று கூறியிருக்கிறார். அதன்படி, 1965ல் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது காலிகள் சேர்ந்து நடத்திய போராட்டம் என்று ஈ.வெ.ராமசாமி தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

அவர் சொல்லியிருப்பதை முதல்வர் ஸ்டாலின் ஒருவேளை படிக்கவில்லை என்றால், “ஹிந்தி எதிர்ப்பு அன்றும் இன்றும்” என்ற புத்தகத்தை ஸ்டாலின்  வாங்கி படிக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதே ஈ.வே.ரா மீண்டும் சொல்கிறார்… ‘எனது ஹிந்தி எதிர்ப்பு என்பது ஹிந்தி கூடாது என்பதற்கு அல்ல… ஆங்கிலம் வேண்டும் என்பதற்காக. தமிழ் வேண்டும் என்பதற்காக அல்ல… ஆங்கிலம் வேண்டும் என்பதற்காக. ஆங்கிலத்தை பொதுமொழியாக, அரசாங்க மொழியாக, தமிழ்நாட்டு மொழியாக, தமிழர்களின் வீட்டு மொழியாக்க வேண்டும் என்பதற்காகத்தான்.’ இதனை பெரியார் விடுதலை இதழில் 27.1.1969-ல் எழுதியிருக்கிறார்.

ஈ.வே.ரா சொன்னதை அவர்கள் நிறைய மறந்துவிடுகின்றனர். சுமார் 50 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஒரு புதிய சரித்திரத்தை எழுதிவிட்டு தற்போது இதுதான் உண்மையென்று தி.மு.க நம்மை நம்பவைத்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை 1969ல் ஈ.வே.ராவுக்கு வயதாகிவிட்டது, அதனால் தவறாக சொல்லியிருக்கக்கூடும் என்று நினைக்கலாம். ஆனால் அதே ஈ.வே.ரா, 1948 அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பேசுகையில் ‘தமிழைவிட ஆங்கிலத்தை கட்டாயப் பாடமாக்கினால், அதற்கு நான் வாக்களிப்பேன்’ என்று கூறியிருக்கிறார்.

திமுகவினர் எங்களுக்கு தமிழ் வேண்டாம், ஆங்கிலம்தான் வேண்டும் என்று கூறுகின்றனர். இதற்கான காரணம் சுலபமானது. தமிழ் என்பது தெய்வீக மொழி. நம்முடைய மொழியில் மட்டும்தான் ஆண்டவன், இறைவன், இறையாண்மை, சனாதன தர்மம் என அனைத்தும் வழங்கியிருக்கக் கூடிய ஒரே மொழி தமிழ்தான். அவர்களுக்குத் இது தெரியும் தமிழ் மொழியை ஊக்குவித்தால், தமிழ் மண்ணிலே இறை நம்பிக்கையை ஊக்குவிக்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியும். தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டும். கடவுள் நம்பிக்கையை மறுத்து ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் அதற்கு தமிழை மறுக்க வேண்டும். அதர்கு தமிழை இல்லை என்ற நிலைக்கு உள்ளாக்க வேண்டும். அதற்கு மாற்றாக ஆங்கிலத்தை கொண்டுவரவேண்டும். இதை தி.மு.க தனது ஆரம்பகால அரசியலில் மிகத் தெளிவாக செய்து ஆங்கிலத்தை புகுந்த ஆரம்பித்தது.

தமிழ் தெரிந்தால், வீட்டில் இருக்கும் குழந்தைகளை காலையில் எழுந்தவுடன் திருவாசகம், தேவாரம், எட்டுத்தொகை, பத்துப்பபாட்டை படிக்க கூறியிருப்பார்கள். இதைப் படித்தால் தமிழும், இறை நம்பிக்கையும், இறை வழிபாடும், இது தமிழ் மண் என்பதும் காலங்காலத்துக்கு மக்களுக்கு தெரியும் என்ற காரணத்தால் மட்டும்தான் தமிழ் மொழியை சற்று இறக்கிவைத்துவிட்டு ஆங்கிலத்தை உயர்த்திப் பிடித்து இவர்கள் அரசியல் செய்கிறார்கள்.

நம்மில் பலர் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது பிறக்கவில்லை, அதனை பார்க்கவில்லை. ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது திமுகவின் கோஷம்… ‘ஹிந்தி நெவர் இங்க்லிஷ் எவர்’. அதாவது ஹிந்தி எப்போதும் வேண்டாம்; ஆங்கிலம் எப்போதும் வேண்டும். தமிழ் எப்போதும் வேண்டுமென்று அவர்கள் கேட்கவேயில்லை. இதைத்தான் திமுக திட்டமிட்டு, இறை நம்பிக்கையுள்ள தமிழை அகற்றிவிட்டு ஆங்கிலத்தைக் கொண்டுவந்தால், அரசியலில் உள்ளே வருவது சுலபமென்று கொண்டுவந்தது.

தி.மு.க பட்டத்து இளவரசர் உதயநிதி, ஹிந்தியை எதிர்த்து வருகிறார். ஆனால், அவரது படங்களில் ஹீரோயின்கள் எல்லாம் ஹன்சிகா மோத்வானி, எமி ஜாக்சன் போன்றவர்கள். அவர், லால் சிங் சத்தா என்ற ஹிந்தி படத்தை வாங்கி வெளியிடுகிறார். தமிழுக்காக பேசிவரும் சாலமன் பாப்பையாவுக்கு எந்த அங்கீகாரமும் அளிக்காத தமிழக அரசு, பெண்களை கொச்சையாக பேசிய திண்டுகல் லியோனிக்கு பாடநூல் கழகத் தலைவராக பதவி அளிக்கிறது. முதல்வர் ஸ்டாலின், ‘பூனை மேல் மதில்’ என தமிழை மாற்றி மாற்றி பேசுகிறார். இதுதன் இவர்கள் தமிழை வளர்க்கும் லட்சணம்.

காங்கிரஸ் ஆட்சியில் பாரதத்தில் எத்த்னை குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தது? ஆனால், பிரதமர் மோடி ஆட்சியில் ஒன்றுகூட நடைபெறவில்லை. இன்னும் 14 மாதங்களில் நடைபெற்வுள்ள நாடாளுமன்ற தேர்தல்வரை பொறுமையாக இருக்க வேண்டும். தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, என்னை கடலூரில் நுழைய விடமாட்டோம் என்கிறார். கடலூர் என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா? கடலூரில் பா.ஜ.க நுழைந்துவிட்டது. அவர் இன்னும் சிறிது நாட்களுக்கு எம்.எல்.ஏவாக இருந்து ஆண்டு அனுபவித்துவிட்டு போய்விடுவார். அணையப்போகிர தீபம்தான் பிரகாசமாக எரியும். அதுபோலதான் அவரும்” என கூறினார்.