எல்லை மீறும் தி.மு.கவினர்

திமுக பதவி ஏற்று சில நாட்களே ஆகியுள்ள சூழலில், தி.மு.க அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், கடைசி மட்டத் தொண்டர்கள்வரை அனைவரும் சர்ச்சைகளில் சிக்குவது  வாடிக்கையாகிவிட்டது. அந்த வரிசையில் இப்பொழுது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிக்கியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான ஆலோசனை கூட்டதை, திருச்சியில் தி.மு.கவின் கட்சி  அலுவலகத்தில் வைத்து நடத்தியதோடு மட்டுமில்லாமல், அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மாநகராட்சி ஆணையர் சுப்பிரமணியன், திருச்சி காவல் ஆணையர் அருண்  ஆகியோரையும் சட்டதிட்டங்களுக்கு புறம்பாக தி.மு.க அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளார்.

இதேபோல, சென்னை ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ எழிலன், முதலமைச்சரின் கான்வாய் கிளாம்பும்போது, பாதுகாப்பு  நடைமுறைகளை மீறி கான்வாய் இருக்கம் பகுதிக்கு உள்ளே நுழைய முயன்றார். அப்போது எழிலனை அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டுருந்த உதவி ஆணையர் கொடி லிங்கம், தடுத்து நிறுத்தி நீங்கள் யார். உள்ளே செல்லக்கூடாது என்று தடுத்துள்ளார். அதனை பொருட்படுத்தாமல் தான் யார் என்று தெரியுமா என்று கேட்டபடியே முதலமைச்சர் கார் அருகே சென்றுள்ளார். பிறகு முதலமைச்சர் அங்கிருந்து புறப்பட்ட பிறகு  வேகமாக காவலர்கள் இருக்கும் பகுதிக்கு வந்த எழிலன், ‘யார் அது, என்னைப் பார்த்து யார் நீ எனக் கேட்டது எனக் கேட்டதுடன் மரியாதையோடு நடந்துகொள்ளுங்கள்’ என குரலை உயர்த்திப் பேசியுள்ளார். இது போன்ற தி.மு.கவினரின் தொடர் செயல்பாடுகள் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்களின் செயலால் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழகத்தில் கெட்ட பெயர் ஏற்படுவதை தவிர்க்க அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.