வளர்மதி கைது அன்றும் இன்றும்

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வளர்மதி என்பவரை ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் நிறுவன ஊழியர் விவகாரத்தில் தி.மு.க அரசு கைது செய்துள்ளது. 2017, 2018ல் இதே வளர்மதியை நெடுவாசல், சேலம் எட்டுவழி சாலை விவகாரத்தில் மக்களை தூண்டியதால் அ.தி.மு.க அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்தபோது பொங்கி எழுந்த தி.மு.க தலைவர் ஸ்டாலினும் அவரது கூட்டணி கட்சியினரும், இன்று அவரை கைது செய்தது ஏன்? அன்று கைது செய்தது தவறு என்றால் இன்று கைது செய்தது சரியா? அவருக்காக குரல் கொடுத்து அன்று கண்டித்த வை.கோ இன்று காணாமல் போனது ஏன்? அ.தி.மு.க அரசு கைது செய்தால் ஜனநாயக விரோதம், தி.மு.க அரசு கைது செய்தால் ஜனநாயகமா? வளர்மதி நக்சல் பயிற்சி பெற்றவர், நக்சல் பயிற்சி பெற பலரை தூண்டினார் என்ற குற்றச்சாட்டுக்களின்போது பொங்கிய தி.மு.க செய்தி தொடர்பாளர்கள் இன்று மௌனம் காப்பது ஏன்? மாணவி வளர்மதியை கைது செய்தது நியாயமா, நீதியா? என்று குரலெழுப்பிய தொலைக்காட்சிகள் இன்று குரலே இல்லாமல் இருப்பது ஏன்? எதிர்க்கட்சியாக இருக்கும் போது அரசுக்கு எதிராக செயல்பட்டவரை ஆதரிப்பதும், ஆளும்கட்சியான பிறகு அதே காரணத்திற்காக அவரை கைது செய்வதும் தி.மு.கவின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. ஆனால், அன்றும், இன்றும், என்றும் மக்களை தூண்டி விட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வளர்மதி போன்ற நக்சல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை பா.ஜ.க மாற்றிக்கொள்ளாது’ என கூறியுள்ளார்.