எஸ்.டி.பி.ஐ பேரணிக்கு அனுமதி மறுப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஹிந்து முன்னேற்றக் கழக தலைவர் கோபிநாத் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “கடந்த ஆண்டு மத்திய அரசு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) என்ற மத அடிப்படைவாத அமைப்புக்கு 5 வருட காலம் தடை செய்து உத்தரவிட்டது. மத்திய அரசால்தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ அமைப்பின் நிறுவனரான அபூபக்கர் என்பவர் தான் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கும் நிறுவனர். பா.ஜ.க மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்பினர் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட வழக்கில் எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த சரோஸ் கான், சையத் இப்ராஹிம், ஆகியோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் ஹிந்துக்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதியில் அதுவும் போக்குவரத்து நெரிசலான இடமான யுனிவர்சல் தியேட்டர் ரவுண்டானா அருகில் வரும் 22ம் தேதி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் முஸ்ளிம் தலைவர்கள் மத மோதல்களை தூண்டும் விதமாகவும் விரும்பத்தகாத வகையிலும் பேசக்கூடிய வாய்ப்புஉள்ளது. அதனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் மட்டுமின்றி, இரு மதத்தினருக்கு இடையே வெறுப்புணர்வும் மத மோதலும் ஏற்படக்கூடும். எனவே இந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி கடந்த 3ம் தேதி எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவை திருப்பூர் மாநகர காவல் துறை ஆணையர் நிராகரிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் இந்த பேரணி, பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு ஜனவரி 17ம் தேதியே நிராகரிக்கப்பட்டு விட்டது” என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.