பயங்கரவாதியின் வீடு இடிப்பு

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் ராஜ்புரா நியூ காலணியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி அஷ்க்யு நிங்ரோவின் 2 அடுக்குமாடி வீட்டை அம்மாவட்ட நிர்வாகம் இடித்துத் தள்ளியது. பயங்கரவாத செயல்களால் திரட்டப்பட்ட பணத்தை கொண்டு, அரசு நிலத்தை ஆக்கிரமித்து இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வீட்டை புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கி அரசு நிலத்தை அவர்கள் மீட்டனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019ல் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய இந்த தற்கொலைப்படை தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 40 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளிகளில் அஷிக்யு நிங்ரோ முக்கியமானவர். இவர் தற்போது பாகிஸ்தானில் உள்ளார். அஷிக்யு நிங்ரோவை தேடப்படும் பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, அஷிக்யு நிங்ரோவின் வீட்டை இடிக்க காஷ்மீரில் செயல்பட்டு வரும் தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.