ராஜீவ் கொலையாளிகளை போல விடுவிக்க கோரிக்கை

பெங்களூருவைச் சேர்ந்தவர் சாமியார் ஷ்ரத்தானந்தா என்ற முரளி மனோகர் மிஸ்ரா. இவரது மனைவி, முன்னாள் மைசூர் திவானின் பேத்தியான ஷகீரா நமாசி. ஷகீரா தனது கணவர் அக்பர் கலீலை விவகாரத்து செய்த பின் ஷ்ரத்தானந்தாவை கடந்த 1986ல் திருமணம் செய்துகொண்டார். கடந்த 1991ம் ஆண்டு ஷகீராவின் சொத்துகளை அபகரிப்பதற்காக ஷகீராவுக்கு மயக்க மருந்து கொடுத்து, தனது மாளிகையில் கொன்று புதைத்தார் ஷ்ரத்தானந்தா. ஷகீராவின் மகள் கொடுத்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் ஷ்ரத்தானந்தாவுக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதனையடுத்து கடந்த 29 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார் ஷ்ரத்தானந்தா, தற்போது அவர் 80 வயதை கடந்து விட்டார். தற்போது அவர் தனது வழக்கறிஞர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், எனக்கு எவ்வித தண்டனை குறைப்பும் இன்றி ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதுவரை எனக்கு ஒரு நாள்கூட பரோல் வழங்கப்படவில்லை. சமீபத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற கொலையாளிகளை உச்ச நீதிமன்றம் விடுவித்தது. அவர்கள் எல்லாம் தங்கள் மேல் முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும்போதே பலமுறை பரோல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அனுபவித்தனர். இத்தகைய கொரூர குற்றங்களில் தொடர்புடையவர்கள் எல்லாம் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனும்போது, என்னை மட்டும் விடுவிக்காதது அப்பட்டமான சமத்துவ உரிமை மீறலாகும். எனவே, எனது மனுவை விரைவில் விசாரித்து என்னை விடுவிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.