இமாம் தலைவருக்கு கொலை மிரட்டல்

மசூதிகளில் முஸ்லிம்களின் தொழுகையை முன்னின்று நடத்துவோர் இமாம் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களது தேசிய அளவிலான அமைப்பின் தலைவராக இருப்பவர் டாக்டர் உமர் அகமது இலியாஸி. டெல்லி கஸ்தூரிபாய் காந்தி மார்கில் மசூதியுடன் இணைந்து அகில இந்திய இமாம்கள் அமைப்பின் அலுவலகம் உள்ளது. இவர் தனது அலுவலக வளாகத்திலேயே வசித்து வருகிறார். இங்கு கடந்த செப்டம்பர் 22ம் தேதி ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் சென்றிருந்தார். உமர் அகமது இலியாஸி மோகன் பாகவத்தை வரவேற்று சுமார் ஒரு மணி நேரம் பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ் தலைவர், அருகிலுள்ள மதரசாவுக்கும் சென்று அங்கிருந்த மாணவர்களிடம் பேசினார். இதனால், மோகன் பாகவத்தை, தேசத்தந்தை எனவும் தேசத்தின் ரிஷி என்றும் இமாம் இலியாஸி புகழ்ந்தார். ஆனால், இதனை மோகன் பாகவத் ஏற்கவில்லை. நமது தேசத்தின் தந்தை ஒருவரே என கூறி இந்த புகழ்ச்சியை அன்புடன் மறுத்தார். இந்நிலையில், அன்று மாலை முதலே தனக்கு கொலை மிரட்டல் வரத் தொடங்கியதாக இமாம் இலியாஸி, டெல்லி காவல் துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில், “ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்த நாள் முதல், எனது தலையை துண்டிக்க இருப்பதாக எனக்கு பலரும் மிரட்டல் விடுக்கின்றனர். முதல் மிரட்டல் கொல்கத்தாவில் இருந்து வாட்ஸ் அப் எண்ணில் வந்தது. மேலும் பாகிஸ்தான், சிங்கப்பூர், இந்தோனேசியா, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் இதேபோல கொலை மிரட்டல்கள் வருகின்றன. சிலர் தங்கள் வீடு, அலுவலக தொலைபேசி மூலமாகவும் மிரட்டுகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்புகார் குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘கொலை மிரட்டலின் பின்னணியில் வெளிநாட்டின் சதி இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு விரைவில் டெல்லி சிறப்பு காவல்துறை பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்படும்’ என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே உமர் இலியாஸியின் வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.