ஏர் இந்தியா இணையதளத்தில் சைபர் தாக்குதல்

ஏர் இந்தியா விமான நிறுவன இணையதள சர்வரான எஸ்.ஐ.டி.ஏ அமைப்பில் கடந்த பிப்ரவரி மாதம் கண்டுபிடிப்பதில் சிக்கல் நிறைந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சைபர் தாக்குதலில், கடந்த 2011 ஆகஸ்ட் 11 முதல் 2021 பிப்ரவரி 2ம் தேதிவரையிலான உலக அளவிலான பயணிகளின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்துள்ளன என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் பயணிகளின் பெயர், பிறந்த தேதி, முகவரி, பாஸ்வோர்ட் விவரம், டிக்கெட் விவரம், கிரெடிட் கார்டு விவரங்கள் உள்ளிட்ட விவரங்கள் கசிந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த எஸ்.ஏ.டி.ஏ சர்வர் ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் மையமாக வைத்து செயல்படுகிறது. இந்த எஸ்.ஏ.டி.ஏ சர்வரில் எந்தவிதமான அங்கீகரிக்கப்படாத செயல்பாடுகள் ஏதும் நடக்கவில்லை. இந்த சைபர் தாக்குதல் குறித்து விசாரணையும், ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. சர்வர்கள் பாதுகாப்பு கூடுதலாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த காலகட்டத்தில் பயணித்த பயணிகள் அனைவரும், தங்களின் பாதுகாப்புக் கருதி முன்னெச்சரிகை நடவடிக்கையாக தங்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாப்பாக வைக்கவும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்ட் பாஸ்வேர்டுகளை மாற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.