மகாபாரதத்துடன் தொடர்பு

டெல்லியில் நடைபெற்ற ‘மகாபாரதத்துடன் தொடர்புப்படுத்திக் கொள்ளுதல்’ (Connecting with the Mahabharata) என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், “பாரத வரலாற்றைப் பற்றி நாம் பெருமை கொள்ள வேண்டும். நமக்கென்று தனி அடையாளங்கள் உள்ளன. நாம் நமது கலாசாரத்தை மீட்டெடுக்க வேண்டும். பாரதம் மீது படையெடுத்தவர்கள் அதன் கலாசாரத்தை, வரலாற்றை சீர்குலைத்தனர். தற்போது அந்த கலாசாரத்தை, வரலாற்றை நாம் மீட்டெடுக்க வேண்டுமே தவிர, புதிதாக பிற கலாசாரங்களை உள்வாங்கிக் கொள்ளத் தேவையில்லை.

நாம் சீனா, ரஷ்யா, அமெரிக்கா போல் இருக்க முடியாது. பாரதத்தின் பழங்கால வரலாற்றைக் கொண்டு நாம் நமது நிகழ்காலத்தை வடிவமைக்க வேண்டும். ஒரே நாளில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துவிடாது. ஆகையால் மெதுவாக நிதானமாக நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வரலாறு என்பது வெறும் புத்தகம் அல்ல. அது புவியியலும் மக்களும் சார்ந்தது. சில கிராமங்களுக்குச் சென்றால் அவர்கள் சீதா எங்கு குளித்தார். பீமன் எங்கு தனது அடையாளத்தை விட்டுச் சென்றார் என எல்லாவற்றையும் தெளிவாகச் சொல்வார்கள். அதுபோன்ற வரலாறுகளுடன் நாம் நம்மை தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் நாம் சாட்சிகளைத் தேட முடியாது. நாம் நமது வேர்களை மறந்துவிட்டோம். நாம் அதனை உறுதிப்படுத்த எப்போதுமே கார்பன் டேட்டிங் போன்ற அறிவியல் ஆதாரங்களை நம்பி இருக்க முடியாது. சில நேரங்களில் கார்பன் டேட்டிங் கூட ஓரளவுக்கான கால கட்டத்தையே நிர்ணயிக்கும். அதன் பிறகு அது துல்லியமாக இருக்காது. நம் வரலாற்றுக்கான சாட்சியங்களை நாம் நமது பாரம்பரியங்களில் இருந்து தேட வேண்டும்.

மகாபாரதத்தை கேள்விக்குள்ளாக்குவோர், மஹரிஷி வியாசர் எதற்காக பொய் சொல்ல வேண்டும், அவருக்கு எந்த ராஜ்ஜியத்தையும் அடையும் எண்ணமில்லையே என்பதை யோசிக்க வேண்டும். மகாபாரதத்தில் போர் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அது வாழ்க்கைக்கான பாடம். அது ஒரு தனி நபர் பற்றிய கதையல்ல. மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்பதை மகாபாரதம் உணர்த்துகிறது. ராமாயணம் இந்த உலகப் பயணத்தை எதிர்கொள்வதர்கு நாம் கற்றுக் கொள்ள உதவுகிறது” என்று பேசினார்.