காங்கிரஸின் குழி பறிக்கும் கனவு: பிரதமர் மோடி வேதனை!

நாட்டு மக்களின் ஆசிர்வாதம் எனக்கு பாதுகாப்புக் கவசமாக இருப்பதை அறியாமல், காங்கிரஸ் கட்சி எனக்கு குழி பறிக்கும் கனவை காண்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்தார். கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பெங்களூரு – மைசூரு இடையேயான‌ 10 வழி நெடுஞ்சாலை, ஹுப்ளி – தார்வாட் இடையிலான சாலை ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். தொடர்ந்து, விழாவில் பேசிய பிரதமர் மோடி, “ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பெங்களூரு – மைசூரு விரைவு சாலையைத் திறந்து வைத்து, நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் பணிகளில் நான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால், நாட்டு மக்களின் ஆசிர்வாதம் எனக்கு பாதுகாப்பு கவசமாக இருப்பதை அறியாமல், எனக்கு கல்லறை தோண்டும் பணிகளில் காங்கிரஸ் கட்சி மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. 2014-ம் ஆண்டுக்கு முன்புவரை, மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி, ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக ஒரு கல்லைக்கூட நட்டுவைக்கவில்லை. மக்களின் பணத்தை காங்கிரஸ் கட்சி கொள்ளையடித்து வந்தது. காங்கிரஸ் ஆட்சியில் எளிய மக்கள் தங்களுக்கான அரசின் பலன்களை பெறுவதற்காக அலைக்கழிக்கப்பட்டனர். ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் அரசின் நலத்திடங்களும், பயன்களும் மக்களின் வீட்டு வாசலை சென்றடைகிறது. நாடு முழுவதும் நவீன உள்கட்டமைப்புக்காக ஏராளமான பணிகள் நடைபெற்று வருகிறது” என்றார்