காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா

தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டியில் இருந்து 12 முக்கிய தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மூத்த கட்சி நிர்வாகிகளை விட, பிற கட்சியிலிருந்து சமீபத்தில் வந்த தலைவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி அவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் தெலங்கானாவில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே உட்கட்சி பூசல் பகிரங்கமாக தெரியவந்துள்ளது. ராஜினாமா செய்த தலைவர்கள் தங்கள் கடிதங்களில், “முதல்வர் சந்திரசேகர ராவ் மாநிலத்தில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். அவரை பதவி நீக்கம் செய்ய வலுவான போராட்டம் தேவை. புதிதாக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகி காங்கிரஸில் இணைந்தவர்கள். இது கடந்த 6 ஆண்டுகளாக காங்கிரஸில் பணியாற்றிய தலைவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது” என கூறியுள்ளனர். ராஜினாமா செய்த உறுப்பினர்களில் தெலுங்கானா சட்டமன்ற உறுப்பினரான சீதக்கா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம் நரேந்தர் ரெட்டி உள்ளிட்டோரும் அடக்கம். அதிருப்தி உறுப்பினர்கள், தங்களது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மலிகார்ஜுன் கார்கேவிடம் அளித்தனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், தெலுங்கானா பொறுப்பாளருமான மாணிக்கம் தாகூருக்கும் ராஜினாமா கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.