உள்நோக்கம் கொண்ட அறிக்கைக்கு கண்டனம்

சர்வதேச அளவில் மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை கடந்த திங்கள்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், பாரதத்தில் மத சுதந்திரம் மோசமடைந்து வருவதாகவும், கிறிஸ்தவர்கள்,முஸ்ளிம்கள், பட்டியல் சமூகத்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மதமாற்றத் தடைச் சட்டத்தை சில மாநிலங்கள் நிறைவேற்றி இருப்பதையும் அது விமர்சித்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், அங்கிருந்து ஹிந்துக்கள் வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை என்றும் ஆளும் பா.ஜ.கவினரின் வெறுப்புப் பேச்சுகள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “தவறான தகவல்களின் அடிப்படையில், உள்நோக்கம் கொண்ட சில அதிகாரிகள் இத்தகைய அறிக்கையை அளித்துள்ளனர். அமெரிக்கா உடனான உறவுக்கு பாரதம் மிகுந்த மதிப்பளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்பாக வெளிப்படைத் தன்மையுடன் பாரதம், அமெரிக்காவுடன் தகவல்களை பரிமாறிக்கொள்கிறது. பாரதத்தில் மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க வெளியுறவுத் துறையின் முந்தைய அறிக்கையும் பாரதத்தை விமர்சிப்பதாகவே இருந்தது. உள்நோக்கத்துடனும், ஒரு சார்புடனும் இதுபோன்ற அறிக்கைகளை சில அமெரிக்க அதிகாரிகள் வெளியிடுகின்றனர். இதுபோன்ற அறிக்கைகள் அவர்களின் நம்பகத்தன்மையை மேலும் சிதைப்பதாகவே அமையும்” என்று தெரிவித்துள்ளார்.