அண்ணாமலை நடைபயணத்தில் பொதுமக்கள் மனுக்களை பெற புகார் பெட்டி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடை பயணத்தில் பொதுமக்களிடம் இருந்து புகார் மற்றும் கோரிக்கை மனுக்களை பெறுவதற்காக புகார் பெட்டி வைக்கப்பட உள்ளது. இந்த புகார் பெட்டியை பாஜக நிர்வாகிகள் சென்னையில் அறிமுகப்படுத்தினர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணம் வரும் 28ம் தேதி ராமேசுவரத்தில் தொடங்குகிறது. நடைபயணத்தில் இடம்பெற உள்ள மக்கள் புகார் பெட்டி அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில், பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.