நகரத்து காக்காவும் கிராமத்து காக்காவும்

நகரத்து காக்கா ஒன்று கிராமத்து காக்காவை பார்க்க வந்தது.

”எங்க பட்டணத்துல, பெரிய பெரிய கட்டடமா இருக்கும். இங்கே ஒரே குடிசையா இருக்கே. அங்கே காரு, பஸ்ஸூனு ஏகப்பட்ட வண்டிங்க ஓடுது. ஆனா, இங்கே கட்டைவண்டியும், சைக்கிளும்தான்…” என்று பட்டணத்து பெருமை பேசியது நகரத்து காக்கா.

‘பட்டணத்துல அப்படி என்னதான் இருக்குன்னு நாமளும் போய் பார்த்துட்டு வருவோம்’ என்று நகரத்து காக்காவுடன் புறப்பட்டு போனது கிராமத்து காக்கா.

”நான் சொன்ன மாதிரி எவ்வளவு கட்டடம் இருக்குன்னு பார்த்தியா… இதெல்லாம் மனுசங்க வாழ்றது…”என்றது நகரத்து காக்கா.

”ஆமாம், ஆனா, நாம வாழறதுக்கு இங்கே மரங்களையே காணோமே…”என்றது கிராமத்து காக்கா.

நகரத்து காக்கா உடனே பேச்சை மாற்றி, ”கீழே பாரு… எவ்வளவு வாகனம் போகுது…”

”வாகனத்தை விடு. ஆளுங்களைப் பாரு… கரும் புகை அடிச்சு சீக்கிரமே நம்ம கலருக்கு மாறிடப் போறாங்க!” என்று ‘கமெண்ட்’ அடித்தது கிராமத்து காக்கா.

நகரத்து காக்கா விழித்தது. அப்போது, ”உடம்பெல்லாம் புழுதியா இருக்கு. குளிக்கணும், ஆத்துக்கு கூட்டிட்டு போ…” என்றது கிராமத்து காக்கா.

ஆற்றை நெருங்கும்போது நாற்றம் அதிகரித்தது.

”ஆத்துலே குளிக்கணும்னு சொன்னா… சாக்கடையை காட்டுறே…?” என்றது கிராமத்து காக்கா.

”இந்த ஊருல இதுதான் ஆறு!”

”ஆறா…? இதுல எங்க ஊரு பன்னிக்குட்டிகூட குளிக்காது. நீ எப்படி குளிக்கிறே?”

நகரத்து காக்கா தயங்கியவாறே ”மழை பெய்யும்போதுதான் குளிப்பேன்…” என்றது.

”அதுதான் உன் மேல் இவ்வளவு நாத்தமா?” என்று முகம் சுளித்தது கிராமத்து காக்கா.

”சரி, வா கடைத்தெருவுக்குப் போய் ஏதாவது சாப்பிடுவோம்” என்றது நகரத்து காக்கா.

”சாப்பிடுறதுக்காக எதுக்கு கடைத்தெருவுக்குப் போகணும்” என்று கேட்டது கிராமத்து காக்கா.

”திருடி திங்கத்தான்”என்றது நகரத்து காக்கா.

”என்னது… திருடித் திங்கவா…? கிராமத்துல ‘கா…கா…’ன்னு கூப்பிட்டு சாப்பாடு போடுறாங்க. இங்கே திருட்டு பிழைப்பா இருக்கே! ச்சீ… ச்சீ… எனக்கு வேண்டாம். நான் கிராமத்துக்கே போறேன். அங்கே கௌரவமா, நிம்மதியா வாழலாம்” என்று சொல்லிவிட்டு பறந்து சென்றது கிராமத்து காக்கா. அதை அப்பாவியாக பார்த்துக் கொண்டிருந்தது நகரத்து காக்கா!