சென்னை இரண்டாவது விமான நிலையம்

சென்னையில் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, தமிழக அரசு சார்பில், செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், மதுராந்தகம் ஆகிய இடங்களும் காஞ்சிபுரம் மாவட்டத்தில், சுங்குவார்சத்திரம் அருகேயுள்ள பரந்துார் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பன்னூர் ஆகிய, நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில், பன்னூர் மற்றும் பரந்துார் இறுதியாக பரிசீலிக்கப்பட்டன. இவற்றில் ஒன்றை தேர்வு செய்வது தொடர்பாக டெல்லியில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை சந்தித்து பேசினார் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. இதில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துார் பகுதியில் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பது என இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.