லாலு வீட்டில் சி.பி.ஐ விசாரணை

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், கடந்த 2004 முதல் 2009ம் ஆண்டு வரை ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் நிறுவனர் லாலுபிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக நிலம்ங்களை லஞ்சமாக பெற்றதாக லாலு குடும்ப உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பாட்னாவை சேர்ந்த பலர், பல்வேறு ரயில்வே கோட்டங்களில் பணியமர்த்தப்பட்டனர். அதற்காக அவர்களது நிலங்கள், லாலு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஏ.கே. இன்போசிஸ்டம் என்ற நிறுவனத்தின் பெயர்களில் மாற்றப்பட்டன. பின்னர் அந்த நிறுவனத்தை லாலு குடும்ப உறுப்பினர்கள் கையகப்படுத்தினர். இப்படி, பாட்னாவில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 292 சதுர அடி நிலங்கள் லாலு குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் மாற்றப்பட்டுள்ளன. அதற்கான பணம், ரொக்கமாக தரப்பட்டதாக ஆவணங்களில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிலங்களின் அப்போதைய வழிகாட்டி மதிப்பு, சந்தை மதிப்பவிட பல மடங்கு குறைவாக காட்டப்பட்டது. நிலம் அளித்த நபர்கள், ரயில்வே துறையின் பணி நியமன விதிமுறைகள் பின்பற்றப்படாமல் நிரந்தரம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக லாலுபிரசாத் யாதவ், அவருடைய மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரிதேவி, இளைய மகனும், தற்போதைய துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இவர்கள், டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் வரும் 15ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சூழலில், இவ்வழக்கில் மேல் விசாரணைக்காக பாட்னாவில் உள்ள லாலுபிரசாத் யாதவ் வீட்டுக்கு சி.பி.ஐ அதிகாரிகள் சென்றனர். ராப்ரி தேவியிடம் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சில கூடுதல் ஆவணங்களை கேட்டனர். வீட்டில் சோதனை எதுவும் நடத்தவில்லை என்று சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவித்தன. “சி.பி.ஐ’க்கும், லாலுவுக்கும் இடையே நீண்ட கால தொடர்புள்ளது. அவர் தண்டனை பெற்ற கால்நடைத் தீவன ஊழல் வழக்கு கூட, அவரது கட்சி கூட்டணி வைத்திருந்த ஐக்கிய முன்னணி ஆட்சியில்தான் தொடரப்பட்டது. அவர் மீது புகார் கொடுத்த அதே சிவானந்த் திவாரி, தற்போது அவரது கட்சியில்தான் உள்ளார். காங்கிரஸ் ஆட்சியில்தான் அவருக்கு தண்டனையும் கிடைத்தது. எனவே, இது அரசியல் பழிவாங்கல் என்பது தவறான குற்றச்சாட்டு. சி.பி.ஐ ஒரு சுதந்திரமான அமைப்பு. அது தனது கடமையை செய்கிறது. லாலு குடும்பத்தினர், முன்பு தாங்கள் விதைத்ததை தற்போது அறுவடை செய்து கொண்டிருக்கின்றனர்” என பீகார் மாநில பா.ஜ.க மூத்த தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.